தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

எவனும் எதுவும் பேசகூடாது - சீமானுக்கு தேசிய பாதுகாப்பு சட்டம்



சிங்கள ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.



அப்போது வன்முறையை தூண்டும் கருத்துக்களை பேசியதாக கடந்த 12-ந் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று 2-வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு குற்றவியல் வக்கீல் ஷாஜகான் ஆஜராகி வாதாடியதாவது:-



சீமான் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளித்த போது 19 நிபந்தனைகள் விதித்தனர்.


இந்த நிபந்தனைகளில் ஒன்றைக் கூட நாம் தமிழர் கட்சியினர் கடை பிடிக்கவில்லை. தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்தையும், விடுதலைப்புலிகளின் கொடியையும் ஏந்தி நேரடியாக ஆதரித்தனர்.



கொடுக்கப்பட்ட நேரத்தை மீறி கூடுதலாக 4 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் இனி தமிழக ரத்த உறவுகளை சிங்களன் தொட்டால் சென்னையில் படிக்கும் சிங்கள மாணவன் எவனும் உயிரோடு திரும்பமாட்டான். சென்னையிலும், திருப்பூரிலும் எத்தனை சிங்களர்கள் உள்ளனர்? என்ற கணக்கு எங்களிடம் உள்ளது என்று சீமான் பேசி இருக்கிறார். எனவே ஏற்கனவே சிங்களர்களை தாக்கக் கூடிய பணியின் முதற்கட்டத்தை அவர் தொடங்கி இருப்பது தெரிய வந்தது.



எனவே சீமானுக்கு ஜாமீன் தரவே கூடாது என்று வாதாடினார்.



சீமான் தரப்பில் வக்கீல் என்.சந்திரசேகரன் ஆஜராகி வாதாடுகையில் பேச்சு உரிமைக்கு சுதந்திரம் உள்ளது. சர்ச்சையான பேச்சுகளால் அப்போதே விளைவுகள் ஏற்பட்டால்தான் கைது செய்ய முடியும். இது அரசியல் நோக்கத்துடன் போடப்பட்டுள்ள பொய் வழக்கு ஆகும் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-



பேச்சுரிமைக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அனைத்து சுதந்திரங்களையும் வழங்கி உள்ளது. ஆனாலும் சில கட்டுப்பாடுகளும் அதே சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளன. சீமானின் பேச்சு 2 இடங்களில் பிறந்த சமூகத்தினரிடையே (சிங்களர்-தமிழர்) நல்லிணக்கத்தை குலைப்பதாகவும் வன்முறையை தூண்டு வதாகவும் உள்ளது. இதற்கான ஆதாரங்களை போலீஸ் தரப்பில் சமர்ப்பித் துள்ளனர்.


மேலும் சென்னையில் வெளிநாட்டை சேர்ந்த பல மாணவர்கள் தங்கி படிக்கும் நிலையில் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அவரது பேச்சு உள்ளது. எனவே சீமானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.


இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.

இதற்கிடையே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமான் ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத பாழடைந்த தனி அறையில் என்னை சிறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளனர். இது சட்டவிரோதம் ஆகும். ஆகவே எனக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படியும், தனிமை சிறையை மாற்றும்படியும் கோர்ட்டு உத்தர விட வேண்டும்.



இம்மனு நீதிபதிகள் நாகப்பன், மற்றும் கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி சீமானை தனிமை சிறையில் வைக்கவில்லை என்றார். இதை கேட்ட நீதிபதிகள் அரசின் பதிலை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.