தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரளா முயற்சி: வைகோ

புதிய அணை கட்டுவதாகக் கூறிக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க
கேரளா அரசு முயற்சிக்கிறது. இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களி்ல் உள்ள 2
லட்சம் ஏக்கர் நிலங்கள் வறண்டு பாலைவனமாகிவிடும் என்று மதிமுக பொதுச்
செயலாளர் வைகோ கூறினார்.

முல்லைப் பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான
நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கேரள சட்டசபையில் அம் மாநில நீர்வளத்
துறை அமைச்சர் என்.கே.பிரேமசந்திரன் அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையி்ல், 113 ஆண்டுகள் பழமைவாய்ந்த முல்லைப் பெரியாறு அணை
பலவீனமாக உள்ளதால் மாற்று இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான நிர்வாக
மற்றும் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.

தற்போதுள்ள அணையை பலப்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்காது என்று அரசு கருதுகிறது.

முல்லைப் பெரியாறு அணை தீவிரவாதிகளால் தாக்கப்படும் அபாயம் அதிகமாக
உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் அணைக்கு கூடுதல்
பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு
அளிக்கவில்லை.

அணை வளாகத்தில் இருந்து கேரள போலீஸாரை அகற்றவும் தமிழக அரசு
விரும்புகிறது. எனினும், தனது எல்லைக்குள்பட்டு கேரள அரசு பாதுகாப்பு
அளித்து வருகிறது என்றார் பிரேமசந்திரன்.

6 மாவட்டங்கள் வறண்டுவிடும்-வைகோ:

இந் நிலையில் கோவில்பட்டியில் பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,

தமிழக மக்கள் எங்கெல்லாம் துன்பம் அனுபவிக்கிறார்களோ, அவர்களின்
துன்பத்தை தீர்ப்பதற்கு நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில்
நதி ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மீனவர்களுக்காக முழக்கமிடுகிறோம். விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறோம்.
நதிகள் இணைப்பு பற்றி நாடாளுமன்றத்தில் முதன் முதலாக பேசியது, நான்தான்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடைபயணம்
செய்தேன். தமிழ்நாட்டின் எதிர்காலம் இருண்டு போய் கிடக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு உடைக்க முயற்சிக்கிறது. அதை தடுக்க
நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். முல்லைப் பெரியாறு அணை
உடைக்கப்பட்டால், அதனால் பாசன வசதி பெறும் 6 மாவட்டங்களில் உள்ள, 2
லட்சம் ஏக்கர் நிலம் வறண்டு விடும்.

இதற்காக ஒரு ஆண்டாக பல போராட்டங்கள் நடத்தினோம். கேரளா செல்லும்
பாதைகளில் மறியல் செய்தோம். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவரும்
கைது செய்யப்பட்டனர்.

தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.