தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-தீர்ப்பு ஒத்திவைப்பு

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக் கட்ட விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர்.

தர்மபுரியில் போராட்டம் நடத்திய அதிமுகவினர் அந்த வழியாக வந்த கோவை விவசாயப் பல்கலைக்கழகப் பேருந்துக்கு தீ வைத்தனர். இதில் 3 மாணவிகள் உடல் கருகி பலியாயினர்.

இந்த வழக்கில் 3 அதிமுக நி்ர்வாகிகளுக்கு தூக்கு தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுகவினர் அப்பீல் செய்தனர்.

இதையடுத்து தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த அப்பீல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இன்னும் ஒரு வார காலத்துக்குள் தமிழக காவல்துறை வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் ரிமாண்ட் அறிக்கை ஆகிய இரண்டையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை தேதி, ஏப்ரல் 13ம் தேதி அறிவிக்கப்படும் என கூறினர்.

அதன்படி, கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்த விசாரணையின்போது, இரு தரப்பினரிடமும் நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர். இரு தரப்பினரும் இறுதி விசாரணையில் முன்வைக்க உள்ள வாத கருத்துகளை ஜுலை இரண்டாவது வாரத்துக்குள் எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை ஜுலை 27, 28 மற்றும் 29 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் என அறிவித்தனர்.

இதன்படி நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கில் இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களான அல்தாப் அகமத், சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் நடத்தப்பட்ட அணிவகுப்பில் 40 பேர் மத்தியில் குற்றவாளிகள் அடையாளம் காண்பிக்கப்பட்டதாக அல்தாப் கூறினார்.

அப்போது இடைமறித்த நீதிபதி, எந்தெந்த குற்றவாளிகளை யார் யார் கண்டுபிடித்தார்கள் என்ற விவரங்கள் கொண்ட அட்டவணை ஒன்றை 28ம் தேதி (இன்று) தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இன்று தமிழக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல்கள், வழக்கின் அத்தனை சாட்சிகளையும் விசாரித்து, சேலம் செசன்ஸ் நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு தொடர்பில்லை என்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.

தண்டனை பெற்றவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சுசில்குமார், செவ்வாய்க்கிழமையே தனது வாதத்தை முடித்துக்கொண்டதால், வழக்கு விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.