தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஒலக மாநாடு நடத்தும் கலைங்கர்!

செம்மொழி மாநாட்டுக்குச் செல்லும் பேறு பெற்ற பத்து லட்சம் மக்களில், ஐநூறு ஊடகவியலாளர்களில் நானும் ஒருத்தி.

 

 

மாநாட்டு தொடக்கவிழாவை மட்டும் பார்த்துவிட்டு அடுத்த நாள் திரும்பிவிடுவதுதான் எனது அசல் திட்டம். அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்தினேன். ஆனால் விதி வலியது. தொலைக்காட்சி ரூபத்தில் அது வந்தது. சென்னை வந்து சேர்ந்த அடுத்த நாள் மாநாட்டுக் கவியரங்கம் சன் நியூஸில் நேரடி ஒளிபரப்பு.

தமிழச்சி கவிதை வாசிக்கவிருந்ததால் அதை பார்க்க முடிவு செய்தேன். அவருக்கு முன்பே கவிதாயினி கயல்விழி கவிதை வாசித்ததால் அதையும் கேட்க வேண்டியிருந்தது. சில நாட்களுக்கு முன்புதான் அவரைப் பற்றிய நகைச்சுவை ஒன்றைக் கேள்விப்பட்டிருந்தேன்.

 

தாத்தா கலைஞரின் பிறந்த நாள் விழாவில் கவிதை வாசித்த போது அதை எழுதிக்கொடுத்தவர் அவர் நிறுத்த வேண்டிய இடங்களைக் குறிப்பதற்காக ஸ்டாப் என்று எழுதியதாகவும் கயல்விழி அதையும் சேர்த்து வாசித்து விட்டதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். அதற்கு பிறகு உன் கவிதையை நீயே எழுது என்று தாத்தா சொல்லியிருப்பார் போலும். வார்த்தைகளை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார் கயல்விழி. குறிப்பாக கலைஞரை கலைங்கர் கலைங்கர் என்று சொன்னார். கலைங்கர் திருவடி வணக்கம் என்றார்.

 

கொடுமை என்னவென்றால் கோவையிலிருந்து சென்னைக்கு ரயிலேறுவதற்கு முன்பு தயாநிதி மாறனின் தமிழை கேட்கும் பேறு பெற்றேன். 'ஒலகத் தமிழ் மாநாடு' என்று உரையைத் துவக்கியவரின் தமிழில் அத்தனை உச்சரிப்புப் பிழைகள்.

முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட எதோவொரு விழாவை தனக்குத் தெரிந்த தமிழில் குஷ்பு தொகுத்து வழங்கிய போது, குஷ்புவையும் தாண்டி தமிழ் தழைக்கும் என்று கமெண்ட் அடித்தாராம் முதல்வர்.

 

கயல்விழியையும் தயாநிதியையும் தாண்டி தமிழ் வாழும்தான். ஆனால் மாநாட்டுக்கு சுமார் நானூறு கோடி ரூபாயை செலவு செய்திருக்கும் கலைஞர் அதில் ஒரு சிறு பகுதியை செலவு செய்து மாநாட்டில் பேசவிருப்பவர்களுக்கு தமிழ் உச்சரிப்பு பயிற்சி கொடுத்திருக்கலாம்.

படித்த இடம் : http://neerottam.wordpress.com