தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழீழம் எங்கள் தாய்த்திருநாடு

ஈழத் தமிழ் திருநாடு
எங்கள் அழகிய தாய்திருநாடு
வானிற் பறந்தங்கு சென்றேன்
ஆகா என்னவொரு அற்புதம்கண்டேன்
மாமாவின் வீட்டினைச் சுற்றி
மாமரம் கண்டேன் மரக்கிளை தன்னில்
தாவிக் குரங்குகள் போல
ஏறிக்கிளைமீது தொங்கி களித்தோம்
தென்னை இளங்காய் பறித்து
தாகம்தணித் திளநீரும் குடித்தோம்
புன்னை மர நிழல்மீது போயிருந்தே
பல பாடல் படித்தோம்
வாழைமரம் பல உண்டு – அதில்
தேனிற் பழுத்த கனி கொய்து உண்டேன்
ஆழக் கிணறதன் பக்கம் – அதில்
அள்ளி தண்ணிர் ஊற்றி ஆனந்தமானேன்
கோழி அடைத்ததோர்கூடு அதில்
குஞ்சு பத்துபதினாறு எனக் கண்டேன்
பொத்திபிடிக்க ஓர் குஞ்சை கோழி
கொத்த வர விட்டோடியே போனேன்
மாட்டு வண்டிகட்டி ஏறி
மாரியம்மன்கோவில் பொங்கிபடைத்தோம்
மேட்டுவழி கல்லுபாதை
மீது கடகட என்று குதித்து
துள்ளி உருண்டது வண்டி
உள்ளே இருந்து குலுங்கிச் சிரித்தோம்
ஆக்கிப் பொங்கல் படைத்துண்டு
காக்கை குருவிக்கும் போட்டு களித்தோம்
வேலி முளைத்த கொடியில்
குண்டுமணி தேடி கையிலெடுத்தோம்
வாயில் கிளுவங்காய்மென்று
மெல்ல கசந்திட நீருண்டு இனித்தோம்
பூவரசம் இலை சுற்றி
நாதசுரம் செய்து பீப்பீ இசைத்தோம்
பூமிவிழும் குரும்பட்டி
கொண்டொரு தேர் செய்து சுற்றி இழுத்தோம்
பச்சை வயல்வெளி சென்றோம் – அங்கு
முற்றிவிளைந்த கதிரினை கண்டோம்
சுற்றி வரம்பில் நடந்து
சோ என்றடிக்கும் காற்றினை உண்டோம்
வானப் பறவைகள் எங்கும்
வட்டமிட்டு பறந்தே கூச்சல் போட
ஆனை முகத்துடையானின்
ஆலயம் ஒன்று அருகினில் கண்டேன்
டண் என்றொலித்ததுகோவில்-மணி
நாதம் இடியெனகேட்டு கலங்கி
விண்ணில் எழுந்தனபட்சி அவை
மீண்டும் மரக்கிளை சேரும் நற்காட்சி
மாடு பசுக்களின் கூட்டம்
மந்தை மந்தையாக வீடு திரும்பும்
ஓடிக்குலைத்தொரு நாயும்
வீணில் துரத்திப்பின் விட்டோடிச் செல்லும்
தாமரைப் பொய்கையும் கண்டோம்
தண்ணீரில் நீந்தி மலர் கொய்தெடுத்தோம்
போரடித்தே வைத்த வைக்கோல்
மேலேபடுத்து மேனி கடித்தோம்
ஆயிரம் இன்பங்கள் உண்டு
அத்தனையும் எங்கள் தாய்திருநாடு
பாவி எதிரிபுகுந்தான் எப்போ
ஈழம் அமைத்து எம்வளம் காப்போம்?