தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

செம்மொழி மாநாட்டில் செம்மை இல்லாத விடயங்கள்

செம்மொழி மாநாடுக்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து, அந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், ஆய்வுகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து தினமும் மக்களிடம் செய்திகளை பரப்பி, மாநாடு இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு உழைத்தவர்கள் ஊடகத்துறையினர். ஆனால், அவர்கள் நேற்றைய மாநாட்டின் ஓரங்கட்டப்பட்டனர். மேடையிலிருந்து பல நூறு அடி தூரத்தில், கிட்டத்தட்ட பந்தலின் முடிவுப் பகுதியில் பத்திரிக்கை நிருபர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து மேடையின் எந்தப் பகுதியுமே தெரியவில்லை. இதனால், தொலைக்காட்சியில் பார்த்தவாறே செய்திகளைச் சேகரிக்க வேண்டியிருந்தது. பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கின் முன் பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமே மின் விசிறிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், மற்றவர்கள் அனைவரும் வியர்வையில் குளித்தனர். தேவையே இல்லாமல் ஏராளமான விளக்குகளை எரிய விட்டதால் மேலும் எரிந்தது உடல்.

மேடையில் 10.20க்கு வந்த முதல்வர் கருணாநிதி, இடையில் சிவத்தம்பி பேசும் போது 11.10க்கு எழுந்து வெளியே சென்றார். ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்தார்.

ஜனாதிபதி பேசத் துவங்கும்போதே, இரும ஆரம்பித்தார். இரு முறை தண்ணீர் குடித்தும், இறுதி வரை கரகரப்பான குரலில், அவ்வப்போது இருமியபடியே பேசிக் கொண்டிருந்தார்.

கருப்புச் சட்டை அணிந்திருந்த பலர், மாநாட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படாமல் திரும்பி அனுப்பி விட்டனர் காவல்துறையினர்.

பந்தலுக்குள் வந்த சிலரை காவல்துறையினர் சோதனையிட்டபோது, அவர்களிடம் மது பாட்டில்கள் இருந்தன. அவற்றையும், சிகரெட் பாக்கெட், தீப்பெட்டி போன்றவற்றையும் காவல்துறையினர் வாங்கி வைத்துக்கொண்டனர். ஒரு சிலர் கொடுக்க மனமில்லாமல், மண்ணைத் தோண்டி புதைத்துச் சென்றனர்.

பல ஆயிரம் பேருக்கு மதிய உணவு கிடைக்கவில்லை. மானிய விலையில் உணவு கொடுத்த இடத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. குறைவான எடையிலும், அதிக விலையிலும் இருந்ததாகக் கூறி, தனியார் உணவு நிறுவனங்கள் அமைத்திருந்த உணவுக்கூடம்-2க்குச்சென்று தேவையானதை வாங்கிச் சாப்பிட்டனர்.

அங்கேயும் போதிய அளவுக்கு உணவு கிடைக்காமல் வெளியே சென்றனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் ஓட்டல் இல்லாததால் பல ஆயிரம் பேர், மதிய சாப்பாடு கிடைக்காமல் பல மைல் தூரம் பசியோடு நடந்து சென்றனர்.