பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம், உறவினர் – நண்பர்களைச் சந்திக்கலாம். ஆனால் புலிகள் ஆதரவு அரசியல் பிரமுகர்களை மட்டும் சந்திக்கக் கூடாது, என்று தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பிரபாகரன் தாயார் சிகிச்சைக்கு அனுமதி மறுத்த விஷயத்தில் தமிழக அரசின் பங்கு எதுவுமே இல்லை… எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றும் இதுவரை கூறிவந்தார் முதல்வர் கருணாநிதி.
ஆனால் உண்மை அதுவல்ல. ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக அரசின் இஷ்டப்படிதான் நடக்கிறது. தமிழக அரசு என்ன சொல்கிறதோ அதுதான் மத்திய அரசின் இறுதி முடிவாக வருகிறது.
பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை தரும் விஷயத்தை அரசியலாக்காமல், பெரிதாக விளம்பரப்படுத்தாமல் வைத்திருந்தனர் வைகோவும் நெடுமாறனும். ஆனால் அதை கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த விஷயத்தில் வைகோவுக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடுமே என்ற கவலைதான் அவரை வாட்டி வதைத்திருக்கிறது.
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு அதற்கு இன்னொரு சான்று.
இதோ அந்த செய்திக் குறிப்பு:
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருவது குறித்து மத்திய அரசு 7.5.2010 தேதியிட்டு – மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதினார்கள்.
நிபந்தனைகளாக, பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும்; அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டுமே தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது; அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெறவிரும்பினால், தமிழக அரசு அதற்கு தேவையான உதவிகளையெல்லாம் செய்திட வேண்டும்; அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடோ, எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது; பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம்; என்று மத்திய அரசு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு பார்வதி அம்மாள் சென்னைக்கு வராமல் இலங்கைக்கு சென்றுவிட்ட காரணத்தினால், மத்திய அரசு 18.5.2010 அன்று தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், பார்வதி அம்மாளின் உடல்நிலை கருதியும், அவர் தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பதை மனதிலே கொண்டும் அவருக்கு ஏற்கனவே விதித்திருந்த நிபந்தனையை தளர்த்தி அவரது மகளின் இல்லத்திலே தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கலாமா என்றும், அந்த அம்மையாரின் உறவினர்களும், நண்பர்களும் அவரைச் சந்திக்க அனுமதிக்கலாமா? என்றும் கேட்டிருந்தார்கள்.
இந்த கடிதத்திற்கு 20.5.2010 அன்று தமிழக அரசு அனுப்பிய பதிலில் பார்வதி அம்மாள் அவரது மகளின் இல்லத்திலே சிகிச்சை பெறுவது பற்றி தமிழக அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்றும், அந்த அம்மையாரை அவரது நண்பர்கள் வந்து சந்திப்பது பற்றி மத்திய அரசே முடிவினை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
இந்த கடிதத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இலங்கையிலே உள்ள இந்திய தூதுவருக்கும் தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ள பதிலில், பார்வதி அம்மாள் அவருடைய மகளின் இல்லத்திலே தங்கலாம் என்றும், அந்த அம்மையாரின் நண்பர்களும், உறவினர்களும் சந்திக்கலாம் என்றும், ஆனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதுபற்றி பார்வதி அம்மாளின் கருத்தறிந்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது…"
- இப்படி நீட்டி முழக்கி ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டதைவிட, வெளிப்படையாகவே தமிழக அரசு (முதல்வர்) ஒன்றைச் சொல்லியிருக்கலாம். 'வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் பார்வதி அம்மாளைச் சந்திக்கக் கூடாது' என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டிருக்கலாம்!
படித்த இடம் - என்வழி