தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சோனியாவின் வெறுப்பில் அழியும் இந்தியா!

தமிழீழ மக்களின் வாழ்க்கை போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை சந்திக்காத கடும் துயர்களை எல்லாம் அவர்கள் சந்தித்து விட்டார்கள். இன்று உலக நாடுகள் தமிழீழ மக்களின் வாழ்வியல் நிலைக் குறித்து தமது நிலைகளை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழின உறவுகள் வெளிப்படையான தமது ஆதரவை அச்சமின்றி பதிவு செய்ய துவங்கியிருக்கிறார்கள். ஊடகங்கள் சில விபரங்களை வெளியிட தொடங்கி இருக்கின்றன. தமிழர் மறுவாழ்வு குடியமர்வுக்கு இலங்கை அதிபர் இனவெறி பிடித்த ராசபக்சே உறுதி அளித்திருப்பதாக செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதிக்கு இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. தமிழீழ மக்களை குடி அமர்த்துவதற்காக இந்தியா தொடர்ந்து செயல்படும் என்பதை அந்தக் கடிதம் குறிப்பிட்டிருக்கிறது.

 



கருணாநிதி எண்பத்து ஏழாயிரம் மக்கள் என்று சொன்னார், ராசபக்சே ஐம்பத்து நாலாயிரம் மக்கள் என்று சொன்னார், மன்மோகன்சிங் நாற்பத்து ஏழாயிரம் தமிழர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் குடி அமர்த்தப்படுவார்கள் என்று சொல்கிறார். இந்த எண்ணிக்கையில் உள்ள முரண்பாடு நம்மை அச்சுற வைக்கிறது. முன்னர் நாம் தெரிவித்ததைப் போல தமிழீழ இளைஞர்களை பொறுக்கி எடுத்து, அவர்களை கொன்றொழிக்கும் திட்டத்தை சிங்கள பேரினவாத அரசு செய்கிறதோ என்ற அச்ச உணர்வு நமக்கு எழுவது நியாமானதாகக்கூட தெரிகிறது. இலங்கையில், இலங்கை ராணுவம் தமிழீழ மக்கள் மீது நடத்திய அக்கிரம போர் முடிந்து ஓராண்டு நிறைவடைகிறது. இன்னமும்கூட தாம் தமிழர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக ஆயிரக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்ற கொடுமை நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

 



அண்மையில் இந்தியப் பயணம் மேற்கொண்ட இனவெறியன் ராசபக்சே, இந்தியாவின் சிறப்பு வரவேற்பை பெற்று, பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு மகிழ்ச்சியோடு நாடு திரும்பியிருக்கிறான். இந்தியாவிலிருந்து எவ்வளவு சுருட்ட முடியுமோ, அவ்வளவையும் சுருட்டிக் கொண்டு, இந்தியாவின் கரத்தைக் கொண்டு தமிழர்களின் கண்களைக் குத்திய பெரும் கொடுமையை நிகழ்த்திய இந்த சிங்கள வெறியன், இனிவரும் காலங்களில் இந்திய வல்லாதிக்க அரசுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிவிடுவானோ என்ற அச்சம் பரவலாக அரசியல் ஆய்வாளர்கள் இடையே ஆழமாக சலசலத்துக் கொண்டிருக்கிறது. என்னக் காரணம் என நாம் ஆய்வு செய்தோமேயானால், உலகத்தையே ஆட்டுவித்த கொடுங்கோலன் ஹிட்லர், மிகச் சாதாரணமாக ஒரு தகவலை சொன்னாலும்கூட, இந்த தகவலில் உள்ள உண்மை நம்மை வியப்பு மேலோங்கிட பார்க்கத்தான் செய்கின்றன.



அதாவது, உலகை முழுக்க தமது ஆதிக்கத்தின்கீழ் என்னால் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை இந்தியாதான் எனக்கு அளித்தது என்று சொல்லிய ஹிட்லர், அதற்கான காரணம் சொல்கின்றான். வெறும் பத்தாயிரம் பேரைக் கொண்ட ஒரு கிழக்கிந்திய கம்பெனி, இவ்வளவு பெரிய நாட்டை தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர முடியுமேயானால், இவ்வளவு பலம் வாய்ந்த படை வைத்திருக்கும் ஜெர்மனியர்கள் ஏன் உலகத்தை தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர முடியாது என்று ஹிட்லர் கூறியதாக ஒரு தகவல் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி என்கின்ற ஒரு வணிக நிறுவனம்தான் இந்தியாவை காலணியாக ஆட்சி செய்தது என்கின்ற அவமானகரமான வரலாற்று உண்மை இன்றும் நம்மை உறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இலங்கையின் போக்கும் சற்றேறக்குறைய அவ்வாறு மாறிவிடுமோ? என்று நினைக்க இலங்கையின் சூழ்நிலை அமைந்துக் கொண்டிருக்கிறது.



சிங்கள ராணுவப்படை தமது ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ளும் விதமாக படைப்பலத்தை பெருக்கிக் கொண்டிருக்கின்றன. படை பலத்தோடு சேர்ந்து கருவிகளின் ஆதிக்கத்தையும் நிலைநாட்டிக் கொண்டு, அதைக்கொண்டு இந்தியாவை அச்சுறுத்த முடியுமா? என்ற கேள்வி எழலாம். வெறும் 12 போர் விமானங்களைக் கொண்ட இலங்கை விமானப்படை நூற்றுக்கணக்கான போர் விமானங்களைக் கொண்டுள்ள இந்தியாவை எப்படி மிரட்டும்? என்ற கேள்வி இயல்பாக எல்லோருக்கும் எழுவது இயற்கை தான். ஆனால் பழ.நெடுமாறன் அவர்கள் தொடர்ந்து ஒரு செய்தியை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார். அது இந்தியாவிற்கு இலங்கையால் பேராபத்து நிகழப் போகிறது என்பதுதான். தற்சமயம் பல்வேறு ஆய்வுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, அது உண்மை என்பது போன்றுதான் தோன்றுகிறது.


வெறும் 2 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கை, தமது முப்படை அணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேரை இணைத்துக் கொண்டுள்ளது. இதில் 3 லட்சம் பேர் தரைப்படையைச் சேர்ந்தவர்கள். 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே ராணுவ கட்டமைப்பில் இருக்கும்போது, 2 கோடி பேருக்கு 3 லட்சம் ராணுவப்படையினர் என்பது அளவிட முடியாத ஒரு கட்டமைப்பாகும். மேலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இயல்பான ஒரு சமரசமற்ற போக்கே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சீனா, இந்தியாவிற்கு எதிர் நிலை அமைக்கும் நாடு என்பதிலே இருவேறு கருத்துக்கு இடமில்லை. அமெரிக்கா அமைத்துள்ள நேட்டோ படையைப் போல, ஒருவேளை சீனா ஒரு ராணுவக் கட்டமைப்பை அமைக்குமேயானால், அந்தப் படையிலே நிச்சயமாக சிங்கள பாசிச அரசு இடம் பெறுவதற்கு பெரும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு அமையும்போது, அது இந்தியாவை அச்சுறுத்தும் கட்டமைப்பாகவே அமையும் என்பதை நாம் எளிதில் தள்ளிவிட முடியாது.


வெறும் 2 லட்சம் ராணுவத்தினரைக் கொண்ட இஸ்ரேல், பலகோடி மக்கள் தொகைக் கொண்ட அரபு நாடுகளின் ஆதிக்கத்தை ஒடுக்கி, தமது அதிகார நடுவத்தை நிறுவ தொடர்ந்து முயற்சிப்பது எப்படி? என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால், இஸ்ரேல் என்பது மேலோட்டமாக ஒரு தனி நாடைப் போன்ற தோற்றத்தை பெற்றிருந்தாலும், அது அமெரிக்காவின் ராணுவ தளவாடக் களம் என்பதுதான் உண்மை. இஸ்ரேல் பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பைப் போல, அமெரிக்காவின் கழுத்திலே சுற்றிக் கொண்டிருப்பதால், அரபு நாடுகளுக்கு, அரபு நாடுகளின் நடுவிலே இருந்துக் கொண்டு, ஒட்டுமொத்த அரபு நாடுகளுக்கும் சவால்விடும் அளவிற்கு இருக்கிறது. இதற்கு ஒரே காரணம், இஸ்ரேல் அமெரிக்காவின் ராணுவத் தளம் என்பதுதான். இந்த கண்ணோட்டத்தோடு நாம் இலங்கையைப் பார்த்தோமென்றால், இந்தியா மிகப் பெரிய நாடாக இருந்தாலும், அமெரிக்காவிற்கு இஸ்ரேல் ராணுவத் தளத்தைப்போல சீனாவிற்கு இலங்கை ராணுவத் தளமாக மாறிக் கொண்டிருப்பதை நம்மால் காலம் தாழ்ந்தாவது புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், இந்தியா கைநழுவிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அதன் முடிவில் தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்கின்ற நிலை வருமேயானால், தேச பக்தி, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் வாய்சவடால் அடிப்பவர்களுக்கு இது மிகப்பெரிய அவமானகரமான நிலையை தோற்றுவிக்கும்.

 

ஒரு காலத்தில் இஸ்ரேல் அரபு நாடுகளை மிரட்டுவதைப் போல, இலங்கை இந்தியாவை மிரட்டாது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. வரலாற்று நிகழ்வுகளின்படி ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகித்திருக்கும் சீனா, பல்வேறு தருணங்களில் இலங்கையை காப்பாற்றி இருக்கிறது. இன்று நிலை மாறி, பொருளாதார ரீதியில் இலங்கையின் தன்னிறைவுக்காக சீனா பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் தொடருமேயானால், இந்துமா பெருங்கடலில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரும் சவாலாக இலங்கை-சீன உறவு இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆற்றல் வாய்ந்த ராணுவ கட்டமைப்பை நிலை நிறுத்தி இருந்தவரை கடலுக்குள் எந்த நாடுகளும் நுழையாத அளவிற்கு ஒரு மாபெரும் பாதுகாப்பு அரணை அமைத்திருந்ததை இப்போதுகூட இந்தியா உணராவிட்டால், அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தித் தரும்.

 



சீனாவைப் பொருத்தவரை படை, பொருளாதாரம் மற்றும் வர்த்தக தன்மைகளில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி தம்மை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் அதன் குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக முடிந்தவரை சீனத்தின் ஆதிக்கத்தை பரவலாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு எவையெல்லாம் செய்ய வேண்டுமோ, அவை எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்துக் கொண்டிருக்கிறது. இது மயிலிறகால் நீவி, வெற்றி பெறும் ஒரு அரசு தந்திரமாகும். இந்த முறையை சீனா மிக சிறப்பாக கையாண்டுக் கொண்டிருக்கிறது. சீனாவைப் பொருத்தமட்டில் தமது நேசநாடுகளை தட்டி வளர்த்தெடுத்து, அங்கிருக்கும் ராணுவத்திற்கு தமது கருவிகளை கொட்டிக் கொடுத்து, வலுமிக்க ராணுவமாக, அந்தந்த நாடுகளை உருவாக்கி, வரும் காலத்தில் போர் என்கின்ற ஒரு சூழல் வரும்போது, தாம் உருவாக்கிய ராணுவத்தைக் கொண்டே தமது எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதாகும்.

 



அந்த அடிப்படையில் சீனத்தின் எதிரியான இந்தியாவை இலங்கைப் படையைக் கொண்டு மிரட்டுவதற்கு, இலங்கைப் படையைக் கொண்டு வீழ்த்துவதற்காக வியூகங்களை சீனா திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உலக அரசியல் ஆய்வாளர்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக, மியான்மர் நாட்டு ராணுவத்தை மிக சிறப்பாக வடிவமைத்து, அந்நாட்டு படையினருக்கான அதிநவீன தொழில்நுட்ப ஆற்றல்களை கொடுத்து, அவர்களை சிறந்த ராணுவமாக வலுபெற செய்வதற்கான பணிகளை சீனா தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நாளை மியான்மர் ராணுவம் சீனத்தோடு இணைந்து களத்திலிருக்கும். இப்படி ஆசிய கண்டத்தில் சீனத்தோடு இணையும் நாடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருப்பது இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும் என்பதை இனியும் புரிந்து கொள்ளாவிட்டால், அது சரியானதல்ல என்பதை நாம் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.


நம்முடைய வாதத்தின்படி இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள, இலங்கை ராணுவத்தினரில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும், சீனாவின் மூளை பொருத்தப்பட்டால், அவர்கள் முற்றிலும் முழுதுமாக சீன ராணுவமாகவே செயல்படுவதற்கான காலம் மிக அருகிலேயே இருக்கிறது என்கின்ற அபாய ஒலியை உலக ஆய்வாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். எமது தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க சென்று திரும்பும்போதும், கச்சத்தீவில் நடைபெற்ற அந்தோணியார் திருவிழாவின்போதும் அவர்கள் பதிவு செய்த ஒரு செய்தி, அங்கே சிங்கள ராணுவத்தோடு இணைந்து ஆய்வு மேற்கொள்ளும் பலர், சீனத்தினராக இருக்கிறார்கள் என்பதுதான். இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் சோனியா தனது சுய விருப்பு வெறுப்பிற்காக தமிழீழம் என்ற ஒரு நாட்டை அழிப்பதற்கு துணை புரிந்தார். ஆனால் தமிழீழம் மலர்வதற்கான சூழலையும், முன்னைக் காட்டிலும் மிக ஆற்றல்வாய்ந்த நாடாக தமிழீழம் அமைவதையும் இனி யாராலும் நிராகரிக்க முடியாத அளவிற்கு அதன் தன்மைகள் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. மேற்கு உலக நாடுகளின் பார்வையில் இலங்கை சீனத்தின் படைத்தளமாக மாறுவதை உணர்ந்து கொண்டதால், அவர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்க அவர்களுக்கான ஒரு ராணுவம் ஆசிய கண்டத்தில் தேவைப்படுமேயானால், அந்த கட்டமைப்பு தமிழீழத்தில் உருவாக்கப்படலாம்.

 



அப்படி உருவாக்கப்படும்போது தமிழீழம்கூட இந்தியாவின் பகை நாடாக வலுப்பெற வாய்ப்புகளை சோனியா காங்கிரஸ் கூட்டம் செய்து பெரும் தவறை இந்திய மக்களின்மீது திணித்துவிட்டது. போகின்ற போக்கில் முன்னைக் காட்டிலும் தமிழீழம் என்பது உறுதிபடுவதற்கான அரசியல் காரணங்கள் இறுகி வருவதை நம்மால் காண முடிகிறது. நாம் திட்டமிட்டதைவிட, நாம் கற்பனை செய்ததை விட, நாம் களமாடியதைவிட, நாம் கதைப்பதைவிட மிக விரைவாகவே தமிழீழம் அமையும். அதற்கான காரணங்களும் நிலைகளும் மிக உறுதியாக இருக்கிறது. மேலும் மேலும் நாம் அந்த வரலாற்றுக் காரணங்களை ஆய்வு செய்து தமிழீழம் அமைவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உறுதியாக்குவோம். வெற்றிபெறுவோம். தேசிய தலைவரின் தலைமையிலான தமிழீழ சனநாயக குடியரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நாம் தயங்காமல் களமாடுவோம். தமிழீழம் பெறுவோம்.


கண்மணி