தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சாதீய கட்சிகளின் " திராவிடரா அல்லது தமிழரா " என்ற புதிய ஆராய்ச்சி.

சாதீய கட்சிகளின் " திராவிடரா அல்லது தமிழரா " என்ற புதிய ஆராய்ச்சி.இப்போது தமிழ்நாட்டில் புதிய ஆராய்ச்சி ஒன்று நடைபெறுகிறது.

தமிழரா அல்லது திராவிடரா என்பதுவே அந்த ஆராய்ச்சி.

இந்த ஆராய்ச்சியை செய்பவர்கள் யார் ?

தமிழர்களுக்குள் ஒரு குறிப்பிட்ட  சாதியை  மட்டும் அரசியல் பிரதானப்படுத்தி  மற்ற தமிழ் இனங்களை எதிர்த்து அரசியல் செய்யும்  ஒரு குழு அல்லது அந்த குழுவின் தலைமை.

ஏன் இப்போது இந்த அவசியம் ஏற்பட்டது ?


ஏனென்றால் சாதீய அரசியல்  இனி எடுபடாது அதற்க்கு சாவு மணி அடித்தாகிவிட்டது. குறிப்பிட்ட சாதியினரின்  ஆதரவு இருந்தாலும் தேர்தலில் வெற்றி பெறவோ அல்லது அதிகாரங்களை கைப்பற்றவோ இந்த  சாதீய அடையாளம் மட்டும் போதாது அதே நேரம் தமக்கு வாக்களிக்காத அல்லது எப்போதும் தங்களை புறக்கணிக்க போகும்  மக்களை ஓரம் கட்ட  ஒரு சித்தாந்தம் வேண்டும் அதற்க்கான விடைதான் இந்த  புதிய ஆராய்ச்சி - தமிழரா ? அல்லது திராவிடரா ?


தமிழர்களை எப்படி  அடையாளம் காண போகிறோம் ?

சாதிகளின் வழியாகவா ?

மொழி பேசும் இனத்தின் வழியாகவா ?

சாதிகளின் வழி தமிழர்களை பிரித்தால் , எந்தெந்த சாதிகள் மட்டும் தமிழர்கள்?

நீங்கள் விரும்புவது அல்லது ஆராய்வது மொழி வழி இனமா ? அல்லது சாதி வழி மொழிபேசும் இனமா ?


                     நீங்கள் காக்க நினைப்பது இருக்க வேண்டும் என நினைப்பது சாதிகளையா  அல்லது சாதிகளின் மக்களையா அல்லது  தமிழ் மொழி பேசும் இனங்களையா?தமிழர் வேறு தமிழ் மொழி வேறு என்றால் யார் தமிழர்கள் என்ற பட்டியலை முதலில் தயார் செய்யுங்கள்.அவர்களை கொண்டு உங்களின் சீரிய அரசியல் நோக்கம் என்ன என்பதனை தெரிவியுங்கள். விவாதியுங்கள். வீட்டுக்கு , பராமரிப்பிர்ற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வண்ணம் பூசுவதை போல அரசியல் கொள்கைகளை மாற்றி அல்லது நிறம் மாற்றி அதன் பலனை அறுவடை செய்ய நினைக்கும் கீழ்தர அரசியலை தவிருங்கள். உண்மையான மக்கள் பணி செய்யுங்கள் உங்களை சாதிகளையும் மீறி  மக்கள் நேசிப்பார்கள்.

        இலங்கையில் தமிழர் இனம் வீழ்ந்ததற்கு காரணம் எனக்கு தெரிந்து திராவிடரா அல்லது தமிழரா என்ற பிரச்சினையால் அல்ல.அது காங்கிரஸ் மற்றும் சோனியாவின்  விருப்பத்தினால் நிகழ்ந்தது. அதற்க்கு துணை போன  தமிழர்களை கொண்ட அரசை தமிழ் நாடு கொண்டிருந்தது. அதற்க்கு மாநில அரசிற்கு பச்சை தமிழர்களின் ஆதரவு பலமாய் இருந்தது. இது  எப்படி சொன்னாலும் உண்மை. இன்னும் ஆராய்ந்தால் தமிழ் இனம் வீழ்ந்தது தமிழ் இனத்திற்குள் இருக்கும் துரோகிகள்தாம்  பெரும் காரணம்.


தமிழ் இன அல்லது தமிழ் சாதிகளின் ஆதரவுடன் அரசியல் செய்யும் விடுதலை சிறுத்தைகள் அல்லது பாட்டாளி மக்கள் கட்சியினரின் இன்றைய நிலை என்ன ?

ஈழத்தில் தமிழர் அழிய காரணமான  மத்திய அரசோடு மற்றும் மாநில அரசோடு அவர்கள் காட்டும்  இணக்கத்திற்கு அர்த்தங்கள் என்ன?


இதையும் சேர்ந்து ஆராயுங்கள் . பல விடைகள் கிடைக்கும்.  நல்ல பதிலோடு மக்கள் பணிகளை உளப்பூர்வமான நேர்மையோடு  செய்ய வாழ்த்துகிறோம்.

ஆய்வுக்கான செய்தி இங்கே :

               ந
மது அடையாளம் தமிழரா? அல்லது திராவிடரா? என்ற தலைப்பில் சென்னையில் முதல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு மருத்துவர் க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.இதில் புலவர் புலமைபித்தன், மா.இலெ.தங்கப்பா இயக்குனர். புகழேந்தி தங்கராஜ், இதழாளர் அய்யநாதன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.இக்கருத்தரங்கை துவக்கி வைத்தும், இறுதியிலும் உரையாற்றிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி, நாம் திராவிடரா அல்லது தமிழரா என்ற விவாதத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

               "தமிழர் என்கிற நமது அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, அதனை தமிழக முதல்வரே செய்து வருகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வரலாற்றில் செழித்திருந்த தமிழினம், அன்னிய இன ஊடுவல்களால் சாதிய நோய்வாய்ப்பட்டுள்ளது.இதனை திராவிட கோட்பாடுகள் மேலும் வலிமைபடுத்துவதாகவே உள்ளது. திராவிடம் என்பது தமிழரின் வரலாற்றில் இடையில் திணிக்கப்பட்டது, அது இடையிலேயே போய்விட வேண்டும்.தமிழன் என்கிற அடையாளம் மட்டுமே தமிழினத்தைத் சூழ்ந்துள்ள பிரச்சனைகளக்கு தீர்வு காண உதவும். உலகமெல்லாம் பிரிந்து போவதற்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் மட்டுமே இணைந்து வாழ்வதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

              சாதியால் நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டிருக்கின்றோம். தமிழன் என்கிற உணர்வால் அதனை நாம் வென்றிட முடியும். கண்டதேவி கோயில் தேர் வடம் பிடித்தது, சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கே. ஈழத்தில் நம் இனத்தை அழித்த போரை நிறுத்த நாம் எப்படியெல்லாமோ போராடினோம்,ஆனால் போர் நிற்கவில்லை. நமது போராட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

         6 கோடி பேர் தமிழ்நாட்டில் இருந்தும் நம்மால் ஈழத்தில் நம் இனத்தைக் காக்க முடியாமல் போனதற்கு நாம் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையாக போராடததே காரணம் ஆகும்.ஒரு பக்கம் திராவிடம் என்ற அடையாளம், மறுபக்கம் சாதியம் என்கிற நம்மை பிரிக்கும் சமூக அடையாளம். ஈழ விடுதலைக்கு எதிராக நடந்த துரோகத்திற்கு திராவிடமும் ஒரு காரணம்.நாம் எப்படி திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம்? இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன.ஒன்று காக்கசாய்ட் எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலாயிட் எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் என்கிற கருப்பினம். நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராய்ட் என்று துணை இனமாக பிரித்துக் காட்டுகின்றனர். இதையே அடிப்படையாகக் கொண்டு நம்மை திராவிடர் என்றும், நாம் தொன்று தொட்டு வாழ்ந்த இடம் திராவிடம் என்றும் கூறுகின்றனர்.ஆனால் திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை. சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது.

           இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே. நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்திவரும் தமிழக முதல்வர் விவாதத்திற்கு அழைக்கட்டும் நான் தயாராகவே இருக்கிறேன்.எனவே திராவிடர் என்ற பொய் எப்படி நமது அடையாளமாக முடியும்? நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்ல, தமிழினத்தை, அதன் அடையாளத்தை சிதைப்பதற்கே பயன்படுத்துகின்றனர்.

        நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தான் தமிழினத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஈழத்தில் தமிழினத்தை அழிக்க நடந்த போர், இப்போது தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நமது அடையாளம் தமிழர் என்பதை உணர்ந்து நாம் ஒன்றிணைய வேண்டும். திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது" என்று மருத்துவர் கிருஷ்ணசாமி பேசினார்.இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

"எங்கள் குருதியோடு இரண்டரக் கலந்துள்ள தமிழ் மொழியின் வழி - எங்கள் தாய் மொழியின் வழி - ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் என்றே எங்களை அடையாளம் காட்டுகிறது வரலாறு.,இந்த நீ்ண்ட நெடிய பெருமிதத்திற்குரிய வரலாற்றைத் திரித்து, தங்களது சுய இலாபங்களுக்காக 'திராவிடர்' என்று எங்களை அடையாளப்படுத்த நினைப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தக் கருத்தரங்கம் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது.நாங்கள் பிறப்பால் தமிழர், இறப்பாலும் தமிழர். எங்களது அடையாளம். அது மட்டுமே எங்கள் அடையாளம் என்று தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.தமிழர் என்கிற எங்கள் அடையாளம் காக்க, தமிழராய் எழுவோம் என்று இக்கருத்தரங்கம் உறுதியேற்கிறது".

       தமிழரா? திராவிடரா? எது நமது அடையாளம் என்பதை ஐயத்திற்கிடமின்றி உறுதிபடுத்த தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கருத்தரங்கத்தை புதிய தமிழகம் கட்சி நடத்தும் என்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.