தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழ் சினிமா-நாயகிகள் எனும் நுகர்வுப் பொருள்.

மத அடிப்படைவாதங்கள், தமிழ் தேசியம், பிராந்திய உணர்வு, என்று பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல்வேறு விதமாய் ஒவ்வொரு பத்தி எழுத்தாளர்களும், விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ் சினிமாவின் விமர்சன சூழலைக் குறித்து யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ள “நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்” இந்த கட்டுரை இதற்கான மறு பார்வையை எழுதச் சொல்லி எனக்குள் தூண்டியிருக்கிறது.

இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா ஒரு மோசமான சூழலால் கட்டுண்டிருக்கிறது. இந்த, இந்த அபத்தங்கள் இப்போது ஆரம்பித்தது என்று குறிப்பிட்டுச் சொல்லுபடியாய் இல்லாமல், தொன்று தொட்டு நெடுங்காலமாய் இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. மறைமுகமாய் தமிழ் சினிமா, கலாச்சாரம் என்ற சொல்லாடலை உபயோகப்படுத்தி, மெல்ல மக்களிடையே ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்தியல்களையும், அல்பத்தனமான உணர்ச்சிகளையும், இவை எவற்றையும் விட, விகாரமாய் நிறுவி வைத்திருக்கும் கட்டமைப்புகளையும் நாம் மறு விசாரணை செய்ய வேண்டிய அவசியத்திலிருக்கிறோம். சொல்லப்போனால் இதுவே வெகு தாமதம் தான். “Any how,It’s better late than never”.

யமுனா ராஜேந்திரனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களைக் கண்டிப்பாய் ஒத்துக்கொள்ள வேண்டியவைதான். அது தமிழ் சினிமா குறித்தான சரியான சொல்லாடல்கள் இல்லை எனும் கவலை, உலக சினிமா என்பதற்கு தமிழ் சினிமா அறிவு ஜீவிகளின் புரிதல், திரைப்பட விழாக்களின் பின்னாலான, வர்த்தக நோக்கம், திரைப்பட அமைப்புகள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களின் பின்னே நிலவும் அரசியல், என்று பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். இது குறித்தான அவரது புரிதல்களை அவர் வெளிப்படுத்தும் போது சினிமாவை நேசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும், மேலதிகமாய் ஒரு கவலை ஏற்படும் என்பது உண்மையே.

ஆனால் இவரது இந்த கட்டுரையில் ஒரு சில இடங்களில் மட்டும் நாம் முரண்பட வேண்டி இருக்கிறது. “தமிழ் சினிமா விமர்சனச் சூழல் தனது அடிப்படையான தப்படியைக் கூட இன்னும் முன் வைக்கவில்லை.” என்று ஆரம்பித்து, இன்று ஒரு சிலரால் “தீவிர விமர்சகர்கள்” என்று கொண்டாடப்படுபவர்கள் மீதான இவரது காட்டமான விமர்சனங்களைக் குறித்து பேசும் போது நாம் சற்றே மாறுபட வேண்டியுள்ளது. அதற்குக் காரணங்களும் உள்ளது.

தமிழ் சினிமாவின் தற்போதைய அறுவறுப்பான சூழ்நிலைக்கு ஓர் முக்கிய காரணம் சரியான விமர்சன சூழல் இல்லாததும் கூட. இன்றும் எங்கள் ஊர்களில் திரை விமர்சனம் என்பது, சன் டீவியின் விமர்சனமாகவோ, குமுதம் அல்லது ஆ.வியின் விமர்சனமாகவோ மட்டுமே புரிந்துக் கொள்ளப்படுகிறது. சற்றே முன்னேறிய அல்லது கணிணி வல்லுநர்களுக்கு மேலதிக வாய்ப்பாக இணையத்தில் ஆங்காங்கு எழுதப்படும் பதிவுகள் மற்றும் ஏதேனும் பொழுது போக்குத் தளங்களின் விமர்சனங்கள் (இதற்கும் ஆ.வி டைப் விமர்சனத்திற்கும் அதிக வித்தியாசமில்லை) கிடைக்கிறது.

http://www.outlookindia.com/images/south_films_020513.jpg

image

தமிழ் திரைப்படங்களுக்கு வெகு ஜன ஊடகங்களில் எழுதப்படும் திரை விமர்சனங்கள், பல்வேறு அரசியல்களினடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன. குறிப்பிட்ட திரைப்படத்தின் இயக்குநர் அல்லது கதாநாயகன், போன்றவர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊடகத்திற்குமிடையேயான நட்புறவினடிப்படையிலேயே இத்தகைய விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் 100 க்கு 40 மார்க் போடறேன் எடுத்துக்கோ என்ற தொனியில் எழுதப்படும் இத்தகைய விமர்சனங்களில் நிறைந்துள்ளப் போலித்தனங்களைப் பார்க்கையில் ஒரு வித ரௌத்ரம் ஏற்படுகிறது.

அறந்தை நாராயணன் போன்றோ ஏற்படுத்திக் கொடுத்த விமர்சன சூழல், சமீப காலங்களில்தான் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. சாரு, அ.ராமசாமி, எஸ்.ரா, யமுனா, ப.திருநாவுக்கரசு, விஸ்வாமித்ரன், தியோடார் பாஸ்கரன்,வெங்கட் சாமிநாதன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, காஞ்சனை சீனிவாசன், பாமரன், பிஸ்மி,போன்ற விமர்சகர்களும், திலகவதி, செழியன் போன்றோரின் உலக சினிமா பற்றிய நூல்களும் கொஞ்சமேனும் வாசகர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் மார்க்சிய சார்பு, திராவிட சார்பு,அழகியல் விரும்புபவர்கள், விளிம்பு நிலை பார்வையாளர்கள்,என ஒவ்வொரு தளங்களில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களே. தான் சார்ந்த அரசியல் சித்தாந்தங்கள் இவர்களது விமர்சனங்களிலும் எட்டிப்பார்த்துக் கொண்டுதானிருகிறது.

அது எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் பராசக்தி குறித்த திராவிட பார்வையாகட்டும், அல்லது யமுனாவின் மார்க்சிய பார்வைகளாகட்டும் ஒவ்வொருவரும் தனது சார்பு நிலையை வெளிப்படையாகவே தெரிவித்து கட்டுரைகளும், விமர்சனங்களும், எழுதிக் கொண்டிருப்பவர்களே. இங்கே நெருடலே யமுனா இடது சாரி விமர்சனச் செயல்பாட்டை ஒட்டு மொத்தமாய் முன் நிறுத்தி, பிற அரசியல் சார்புகளையும், காலச்சுவடு எழுத்தாளர்கள் என்று சொல்லி தியோடார், அ.ராமசாமி போன்றவர்களயும், இன்ன பிற காரணங்களுக்காக எஸ்.ரா, சாரு போன்றவர்களையும் எளிதில் புறம் தள்ளுவதுதான்.

நிற்க. கருத்தியல் அடிப்படையில் இந்த விமர்சகர்கள் அனைவரும், எல்லா படங்களுக்கும், வெகு ஜனநாயகமான, முன் மதிப்பீடுகளற்ற, நடு நிலை விமர்சனங்கள் தான் எழுதி இருக்கிறார்கள் என்று நான் சொல்ல வர வில்லை. இந்த விமர்சகர்களின் ஒரு சில விமர்சங்களில் நிலவும் தேவையில்லாத காட்டமும், காட்சி ஊடகம் என்பதை மறந்து வெறுமனே தான் சார்ந்த அரசியல் சார்பை முன்னிறுத்தி, வெறுப்பினை உமிழும் சில சந்தர்ப்பங்களையும் நாம் அறிந்துதான் இருக்கின்றோம். இது யமுனாவிர்கும் பொருந்தும்.

தமிழ் சினிமா இப்போதிருக்கும் நிலையில், இவர்கள் செய்யும் சிறு சிறு பிழைகளை புறம் தள்ளி, இவர்களனைவரிடமிருந்தும், மேலதிகமாய் இன்னும் அதி தீவிர செயல்பாடுகளை வேண்டி நிற்கும் சூழ்நிலையில் நாம் நிற்கின்றோம். ஏனெனில் இப்போது (என்னைப் பொறுத்தவரை) நம் முன் விரவி நிற்கும் முக்கியப் பிரச்சினை விமர்சனங்கள் எத்தகைய தன்மையுடையதாய் இருக்க வேண்டும் என்பதே அல்ல. அதை விட பூதாகரமாய் தமிழ் சினிமாவின் அவலங்களும், அறுவறுப்புகளும் நம் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. அப்படி என்ன தமிழ் சினிமா சூழல் கட்டமைத்து விட்டது?? இதெல்லாம் சும்மா அளவுக்கதிகமாய் மதிப்பீடுகளைக் குறைத்து கூறும் ஒரு முயற்சி என்று எவரேனும் சொல்லலாம். ஆனால் இப்படியாய் நாம் கூறுவதற்கும் ஆதாரங்களாய் சில இருக்கத்தான் செய்கின்றன.

நடிகைகள் அல்லது சதை வியாபாரிகள்:

தமிழ் சினிமாவில் நடிகைகளை வெறும் நுகர்வுப்பண்டமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதை என்னால் ஒரு உச்சக்கட்ட அறுவறுப்பான ஒன்றாகவே பார்க்க முடிகிறது. பெண்ணியம் குறித்து பல்வேறு தளங்களில் விவாதங்களும் கேள்விகளும் எழுப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனது உச்சகட்ட பாக்கியமாய்,”கதாநாயகனிடம் திட்டுக்களோ, அடியோ அல்லது இலவசமாய் தமிழ் கலாச்சரம் பற்றிய உபதேசங்களையும் வாங்கிக் கொண்டு, அவனது காலைச் சுற்றிக் கிடப்பதே” தனது லட்சியமாய் கொண்டு வாழும் அழகு பொம்மைகளையே கதாநாயகிகள் என்று தமிழ் சினிமா சூழல் நமக்கு ஒரு புனைவை ஏற்படுத்தி இருக்கின்றது. சத்யராஜ், சிம்பு,தனுஷ்,விஜய்,சரத்குமார் போன்ற கதாநாயகர்களின் பல திரைப்படங்களில் நாயகிகள் ஏதாவது ஒரு பாட்டில், நாயகனின் காலைச் சுற்றிக் கட்டியபடி உட்கார்ந்திருப்பார்கள். இதை மதிக்காத ஓர் தோரணையில் நாயகன் படு அலட்சியமாய், எங்கேயோ பார்த்த படி காலை விரித்த படி நின்றுக் கொண்டிருப்பான். இந்த இடத்தில் நாயகி தனது நடிப்புத் திறமைக்கு விடப்பட்ட சவாலாய் கருதிக் கொண்டு எவ்வளவுக்கெவ்வளவு விரகதாபத்தை தனது முகத்தில் காட்ட வேண்டுமோ அவ்வளவு தூரம் முயற்சித்து நடித்திருப்பார். மிஞ்சி மிஞ்சிப் போனால் அவருக்கு அந்த படத்தில் இதை விட சிறந்த ஓர் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் ஓர் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

“உங்களுக்கெல்லாம் அம்மான்னு ஒரு ஸ்தானம் இல்லைன்னா மரியாதையே இருக்காது”என்று தனது காதலியைப் பார்த்து விஜய் ஒரு வசனத்தை பேசியிருப்பார். அப்படி கோபப்பட்டு கேவலமாய் நினைக்கும் எந்த ஒரு பெண்ணையும் தனது காதலியாய் அல்லது மனைவியாய் ஏற்றுக் கொள்ள ஓர் அடிமட்ட மடையன் கூட நினைக்க மாட்டான். ஆனால் தான் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு பெண்ணிடம் இது போன்று பல முறைகள் அந்த படத்தில் விளாசியிருப்பார். இந்த வசனம் சொல்லப்பட்ட போது, தியேட்டரில் இருந்த பெரும்பாலான கல்லூரி மாணவன்களும் மூச்சு விடாமல் ஆரவாரம் செய்தார்கள். தனது டார்கெட் ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் பொருட்டு தனது பெரும்பாலான படங்களில் இது போன்ற ஒரு சில சீன்களை தொடர்ச்சியாய் கையாண்டுக் கொண்டிருக்கிறார் விஜய். அவர் நடித்த சிவகாசி படம் இதற்கு இன்னொரு உதாரணம். எல்லாரும் கூடியிருக்கும் ஒரு கல்யாண மண்டபத்தில் ஒரு பெண்ணை Humiliate செய்வது என்பது சத்தியமாய் ஒரு பொறுக்கித் தனமான செயலே.எந்த ஒரு சுய மரியாதையுள்ள பெண்ணும், தன்னை அசிங்கப்படுத்தும் அப்படி ஒருவனை விரோதியாய்தான் பார்ப்பாளேயொழிய அவனுடன் கட்டிப் புரண்டு, காதல் செய்ய நினைக்க மாட்டாள்.

ஆனால் தமிழ் சினிமா இங்கு சுய மரியாதையுள்ள மற்றும் படித்த பெண்களை கர்வக்காரிகளாகவும், அகம்பாவம் மிக்கவர்களாகவும், ஏழைகளையும், முதியவர்களை மதிக்காத திமிர் பிடித்தவளாகவுமே நமக்கு அடையாளப்படுத்தி வருகிறது. பாலிவுட்டுடன் போட்டி போடக் கூடிய அளவுக்கு சிறந்ததாய் தற்போது விளங்குவது நம் கோலிவுட்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில், “அய்யா நம்ம சின்னம்மா பட்டணத்துல படிப்பை முடிச்சுட்டு நாளைக்கு வர்றாங்களாம்” என்று சொல்லும் ஓர் ஒற்றை வரியைத் தொடர்ந்து தொடங்கும் கதாநாயகியின் அறிமுகம். அவரது அறிமுக காட்சியில் ஒன்று அவர் ஏதேனும் ஒரு சிறுமியையோ, அல்லது ஓர் முதியவரையோ கோபம் கொண்டு அறைவாள் அல்லது தனது காரை அரை நொடி கூட பிரேக் போடத் தயங்குபவளாய் ஏதேனும் ஓர் கோழியையோ, ஆட்டையோ சாகடித்துச் செல்லும், ஓர் அற்ப பிறவியாகவே காட்டி வருகிறது.

இப்போ எல்லாம் எங்கய்யா இப்படி படம் எடுக்கிறாங்க? அது எல்லாம் இப்போ இல்லை என்று கூற நினைப்பவர்க்கு நான் சொல்ல வருவது இதுதான். படித்த அல்லது தான் சார்ந்த துறையில் திறமை மிக்கவர்களாய் இருக்கும் பெண்களை இவ்வாறு கர்வக்காரிகளாகவும் அல்லது ஆண்களைக் கண்டாலே வெறுக்கும் ஓர் அகம்பாவக்காரிகளாவும் காட்டிக் காட்டியே தமிழ் சினிமா மக்களின் மனதில் விதைத்த நஞ்சுக்கள் ஏராளம். வெகு நிச்சயமாய் இது பெண்கள் குறித்தான ஓர் மறைவான கட்டமைவு ஏற்பட காரணமாய் இருந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். வில்லன் “உன்னை கற்பழிக்கிறேன்” என்று சொல்லி கற்பழிப்பான். கதாநாயகன் “உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொல்லி கற்பழிப்பான். அவ்வளவே. உலக சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவும் கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்று சொல்லி அதனடிப்படையில் நிகழ்த்தப்படவேண்டிய புற மாற்றங்களாகச் சொல்லப்பட்டு வரும் விஷயங்களில் முக்கியமானவை, 2 1/2 மணி நேரச் சினிமா என்பதிலிருந்து மாற்றுதல், காட்சிகளை இடைவேளைக்கு முன், பின் என்று பிரிக்காமல், இடைவேளையற்ற சினிமாவாக மாற்றுதல், பாடல்களற்ற சினிமாவை உருவாக்குதல் என்று பல்வேறு விஷயங்களை விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் பாடல் காட்சிகளில்லா சினிமாவை எவர் ஏற்றுக் கொள்ளக்கூடும். தனக்கு பிடித்த நாயகியின் பல்வேறு தாபங்களையும், கணவனின் முன் மனைவி கூட செய்ய யோசிக்கும் உடல் அசைவுகளயும், க்ளோசப் ஷாட்டில் நாயகியின் அங்கங்களையும், காதல் விளையாட்டுகளையும் பார்த்து கிளர்ச்சியுறும் கூட்டமாய், ஒரு சமூகத்தையே, தமிழ் சினிமா மாற்றி வைத்திருக்கும் இந்த சூழலில், பாடல்களில்லாமல் திரைப்படங்களா???? “போங்கடா போய் பொழப்பைப் பாருங்கடா” என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கோபம் கொள்ளக்கூடும்.

தமிழ் சினிமா, தனது ரசிகர்களுக்கு செய்த ஒரு பெரும் தொண்டு, அவர்களை “விசிலடிச்சான் குஞ்சுகளாக” மாற்றி வைத்திருப்பதுதான். சந்திரமுகி திரைப்படத்தில், ரஜினியைப் பார்த்து, நயன்தாரா “இப்போ பேசாம போ…. போ” என்று ஒருமையில் பேசுவார். இந்த காட்சி வரும் போது தியேட்டரில் பாதி பேருக்கு மேல் “ஏய்ய்ய்ய்ய்” என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். தனது ரசிகர்களின் உச்ச கட்ட ரசனையை தெரிந்துதானோ என்னவோ, அவர்களை சமரசம் செய்ய, ரஜினியும், நயனைப் பார்த்து அடுத்த காட்சியில் “போடி” என்று சொல்லி விட்டுப் போவார். அதன் பின்பே எங்கள் ரசிகர்கள் தலைவர் பழி வாங்கிட்டார் என்ற அல்ப உணர்ச்சியுடன் சமாதானமடைவார்கள். தமிழ் சினிமா கட்டமைத்த இத்தகைய ரசனையான சூழலிற்கு வெகு நிச்சயம் வெட்கப்பட வேண்டும்.

தாலி, கற்பு,கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ் சினிமா பெண்களுக்கும், கதாநாயகிகளுக்கும் மட்டும் என்று கட்டமைத்திருக்கும் விதிகள் ஏராளம். தாலி என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், பாதி இயக்குநர்கள் திரைப்படங்களே எடுத்திருக்க முடியாது. இவர்கள் தாலியை வைத்து இன்னும் பம்பரம் விடாதது மட்டும்தான் பாக்கி. நாயகி தனது தாலியை அவிழ்த்தெறியும் போது, அடிக்கின்ற கடல் அலைகள் நின்று விடுகின்றது, கூடு திரும்பும் பறவைகள் பறப்பதை நிறுத்தி விடுகின்றன, “அய்யோ ஒரு கோபத்தில் நான் தாலியை அவிழ்த்தெறிந்து விட்டேனே” என்ற எண்ணத்தில் நாயகி கதறி அழுகின்றாள்….டேய் என்னதாண்டா பிரசினை உங்களுக்கு?? நீங்க எல்லாம் நார்மலாவே படம் எடுக்க மாட்டீங்களா என்று நாம் கதற வேண்டியதாயிருக்கிறது. நாயகியின் தொப்புளை வைத்து என்ன என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்தது போல், தாலியை வைத்து எப்படி எப்படி எல்லாம் செண்டிமெண்டுகளை உருவாக்கலாம் என்று இவர்கள் யோசித்து வைத்திருந்திருக்கிறார்கள். அதன் உச்ச கட்டமாக குஷ்பூ ஒரு படத்தில் தாலியால் ஒருவனை கொலையும் செய்கிறார்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கற்பழிப்பு என்பதற்கான தண்டனையாய் நம் தமிழ் சினிமா கிராம பஞ்சாயத்துக்கள் வழங்கி வந்த தீர்ப்பு, “கெடுத்தவன் பொண்ணைக் கட்டிக்கணும்”. ஒரு பொண்ணை நமக்கு பிடிச்சுப் போச்சுன்னா, அவளுக்காக அலைய வேண்டிய தேவையில்லை. காதல் கடிதம் எழுதி, அவள் வரும் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. “உன்னைத் தவிர வேறொரு பொண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்” என்று வசனம் பேசத் தேவையில்லை. ஏன் அவளுக்கு ஒரு ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடுக்கக் கூட தேவையில்லை. வேறு என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பிள், அவளைக் கெடுத்துடலாம். அது எப்படி அவ்வளவு சாதாரண விஷயமா? அவள் தனியே இருக்க வேண்டுமே அதற்கு என்கிறீர்களா?? அடப் போங்க சார், கல்லூரி லைப்ரரி, ஊர் ஆத்தங்கரை, சவுக்குத் தோப்பு எல்லாம் எதற்கு இருக்கிறது? அங்கே தாராளமாய் துரத்திப் பிடித்துக் கற்பழித்துக் கொள்ளலாம். சுடுகாட்டுல கூட ஒண்ணு ரெண்டு பேரை நீங்க பார்த்து விட முடியும். எங்கள் ஊர் தமிழ் சினிமாக்களில் வரும் இத்தகைய இடங்களில் மட்டும் நாய் கூட கண்ணில் படாது. இங்க இன்னொரு விஷயமும் இருக்கு, அந்த பொண்ணை நீங்க காதலிக்கிறேன்னு சொன்னீங்கன்னா ஊரே ஒண்ணு கூடி அருவாளைத் தூக்கிட்டு வந்து உங்க காதலை எதிர்க்கும். மாறா அவளைக் கற்பழிச்சுட்டேன் என்று சொல்லி விட்டீர்களானால், ஊரே ஒண்ணு கூடி இருவரையும் சேர்த்து வைத்து விடும்.

கற்பழிப்பு என்ற சொல்லாடலின் மூலம் தமிழ் சினிமா தமிழ் பெண்களுக்கு ஒரு மிகப் பெரிய கட்டமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ள்ளது. கற்பு கெட்டுப் போச்சுன்னா அவ தற்கொலை செஞ்சுக்கணும். வீரம் வெளைஞ்ச மண்ணு படத்தில விஜயகாந்த் “என் தங்கச்சி எவனாலோயோ கெடுக்கப்பட்டான்னு ஊர் சொல்லக்கூடாதுடா” என்று சொல்லி வில்லனை அடித்து கெடுத்து, சாகடிக்கப்பட்ட தனது தங்கையின் கழுத்தில் தாலியைக் கட்டச் சொல்லுவார். இந்த காட்சி காட்டப்பட்ட போது, விஜயகாந்த், பார்வையாளர்கள், தியேட்டர் ஆப்பரேட்டர், தியேட்டருக்கு வெளியே, விளக்குக் கம்பத்தில் காலைத் தூக்கி சிறுந்ர் கழித்துக் கொண்டிருந்த நாய் என எல்லாருமே கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தனர்.

சரி இப்போ எல்லாம் இது போன்ற படங்கள் முற்றிலுமாய் குறைந்து விட்டனவே. தமிழ் சினிமா ஒன்றும் அவ்வளவு மோசமான சூழலில் இல்லை. இது எல்லாம் உங்களை மாதிரி, மசாலா படங்களை ரசிக்கத் தெரியாதவர்கள் பேசும் உளறல் என்று எவரேனும் சொல்லலாம். காட்சியமைப்புகள்தான் மாறியிருக்கின்றனவே தவிர, கட்டமைப்புகள் மாற வில்லை. இன்றும் ஹரி, பேரரசு பட நாயகர்களால், தமிழ் பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? என்று ஆரம்பித்து, நாயகியிடம் அறிவுரை கூறும் வசனங்கள் இடம் பெறத்தான் செய்கின்றன. இதைச் சொல்ல ஆண் என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் போதும் கதாநாயகனுக்கு. வேறெதுவும் தேவையில்லை.

பெண்ணின் உடலை மையமாய் வைத்து விவாதங்களும், வன்முறையும், கலாச்சார மாற்றங்களும் இங்கே தொடர்ச்சியாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்ணின் உடலை ஒரு துய்ப்புக்களமாய் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு அவலம் தொடர்ச்சியாய் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உடலரசியலினடிப்படையில் இதைப் பார்க்கும் போது இதன் பின்னே நிலவும் நுண்ணரசியலும், அவை நிறுவ முயல்வதும் நமக்கு புலப்படும். தன்னுடைய உடலை, அங்கங்களை (exhibitionism)வெளிக்காட்டி ஒரு ஆணை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும், பெண் மறைமுகமாய், தன்னுடைய உடல் கூறுகளை வெளிச் சொல்லி, “ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த, அவளது உடலடிப்படையில் மேற்கொள்ளும் தீண்டல்களே போதும்” எனும் கட்டமைவை தமிழ் சினிமா மறைமுகமாய் ஏற்படுத்தி இருக்கின்றது. அப்படி இல்லா விட்டால், நம்மால், நாயகியை நாயகன் உடலளவில் அசிங்கப்படுத்தும் காட்சிகளைப் பார்த்து சுரணையில்லாமல் ரசித்துக் கொண்டிருக்க முடியாது.

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கப்புறம் நடிக்கும் நாயகிகளின் எண்ணிக்கையை சொல்லி விடுங்கள் பார்க்கலாம். இதன் பின்னே ஒளிந்திருக்கும் பச்சையான ஆதிக்க உணர்வுகளை, உடல் ரீதியான தமிழ் சினிமாவின் அவலத்தை எவரேனும் புரிந்துக் கொள்ள மறுக்கிறோம் என்றால், நாமும் நமது சுய தேவைகளுக்காக பெண்களை உபயோகப் படுத்திக் கொள்வதில் தவறில்லை என்று கருதும், ஓர் அப்பட்டமான ஆதிக்கவாதிதான் என்றுதான் அர்த்தப் படுத்தத் தோன்றுகிறது எனககு.

நமீதா,ஸ்ரேயா, மாளாவிகா, மும்தாஜ், ரம்யா, வேதிகா போன்ற இததகைய கதாநாயகிகளைப் பார்க்கும் போது ஒரு வித பரிதாப உணர்வே வருகிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு இவர்கள் தமிழ் சினிமாவில் நாயகிகள் என்று சொல்லிக் கொண்டு வலம் வந்துக் கொண்டிருக்கலாம். திரைப்படம் சார்ந்த விழாக்களில் முடியும் வரை குறைவான ஆடைகளை அணிந்துக் கொண்டுப் போய், கேமெராக்களை தன் பக்கம் திருப்புமாறு செய்யலாம். நடு நடுவே அருவிக்கரையிலோ அல்லது வயல் வரப்பிலோ (எந்த இடமாய் இருந்தால் என்ன), முழுதாய் வேட்டி சட்டையையோ, பேண்ட் சட்டையையோ அணிந்த நாயகனுடன் பிகினியுடன் “எந்த மரத்துக் கட்டை நீ” என்பது போன்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடலுக்கு சிரித்த படியே நடனமாடலாம். உன்னை பார்த்து பார்த்து சலித்து விட்டது என்று தமிழ் ரசிகர்கள் இன்னொரு கதாநாயகியிடம் மையல் கொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில், தெலுங்குப்படத்திற்கோ அல்லது ஏதேனும் ஒரு தொழிலதிபரையோ பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாம்.

இத்தனை வருடம் லைம் லைட்டிலேயே இருந்துக் கொண்டு திடீரென்று ஒரு வீடும், காரும் ஷாப்பிங்கும், சமையலறை வேலைகளும் மட்டுமே தனது உலகமாய் மாறிப்போனதனலான உளவியல் மாற்றங்களை நாயகி சரிவர புரிந்துக் கொண்டால், அவருடைய மண வாழ்க்கையாவது நிம்மதியாயிருக்கும். இல்லையெனில் குடும்ப நல கோர்ட்டுகளில் ஒரு வழக்கை அதிகப்படுத்தி இன்னும் சில நாள் மீடியாக்களின் காமெராக்களில் வலம் வரலாம். பின்பு அக்கா வேடம், சின்னத்திரை நாயகி வேடம் என்று தனது வாழ்க்கையை ஒரு முற்றுப் பெறா பயணமாகவே முடித்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு குறைந்தது மூன்று கதா நாயகிகளாவது தற்கொலை செய்து கொள்வதன் பின்னாலான உளவியல் மற்றும் உடல் சார் பிரச்சினைகளை ஏனோ தமிழ் சினிமா புறக்கணித்தே வந்துக் கொண்டிருக்கிறது.

Image

இப்பொழுதெல்லாம், “எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்னோட டெட்டி பியர்தான்” என்று சிணுங்கிக் கொண்டே பேட்டி தரும் கதாநாயகிகளைப் பார்க்கையில் இரக்க உணர்வும், பரிதாபமும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

பி.கு: சினிமா விமர்சகர்கள் குறித்தான காட்டமான பார்வைக்கு மறுமொழியாய் ஆரம்பித்த இந்த கட்டுரை நாயகிகளின் அபலைத்தனத்தில் வந்து முடிந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் நிரம்பி இருக்கும் அபத்தங்களின் ஆரம்பம்தான் இது.இன்னும் இதைத்தாண்டி விமர்சகர்களின் பல்வேறு சார்பு நிலைப்பாடு குறித்தும், பெண்கள் பிரச்சினைகளைத் தவிர்த்து, பொது வெளியில் தமிழ் சினிமா ஏற்படுத்தி இருக்கும் வேறு சில அற்பத்தனங்கள் குறித்தும், கலாச்சார மற்றும் பாசிச உணர்வுகள் குறித்தும் தொடர்ச்சியாய் அடுத்த பகுதியில் பேசுவோம்

நன்றி செல்வன்

தமிழ் அமுதம்


இந்த கட்டுரை தொடர்பாக வாசகர் ஒருவர் தெரிவித்த கருத்து தமிழ் அமுதத்தில் இருந்து .....

கண்னாடியில் தெரியும் உருவம் சரியில்லை என கண்ணாடியை வையலாமா?

சமுதாயம் எந்த ஒழுங்கமைப்பில் இருக்கிறதோ அதே ஒழுங்கமைப்புதான் அது படைக்கும் கலைவடிவங்களில் வெளிப்படும்.நம் வீடுகளில், பொது இடங்களில், அலுவலகங்களில் பெண்களை எப்படி நடத்துகிறோமோ, மதிக்கிறோமோ அப்படிதான் திரையில் பெண்களை நடத்துகிறார்கள்.

ஒரு பெண் ரோட்டில் நடந்தால்/பஸ் ஸ்டாண்டில் நின்றால் கல்லூரி இளைஞர்கள் என்ன செய்வார்களோ அதையே வெள்ளிதிரையில் நாயகன் செய்கிறான்.என்ன நம் இளைஞர்களுக்கு பாட வராது.அந்த குறையை "ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்" என பாடி கதாநாயகன் பூர்த்தி செய்கிறான்.கல்லா நிரம்பி வழிகிறது.

குட்டை பாவாடை அணியாதே, ஜீன்ஸ் போடாதே" என்பது சமூகத்தில் (மற்றும் தமிழ் இணைய குழுமங்களில்) பெண்களுக்கு இலவசமாக வழங்கபடும் அறிவுரை.அதை திரையில் விஜய் வழங்குகிறார். அந்த அறிவுரையை மீறும் பெண் பலாத்காரத்துக்கு அல்லது ராக்கிங்குக்கு உள்ளாவாள் என்பது எழுதப்பட்டாத சட்டம் மற்றும் எதிர்பார்ப்பு.ஜீன்ஸ் அணிந்து புட்டத்தை காட்டுபவள் ரேப்பை/சீண்டலை தானாக வரவழைத்துகொள்கிறாள்.சினிமாவில் ரேப்பை தடுக்க விஜய் இருக்கிறார்.தமிழ்நாட்டு தெருக்களில் விஜய் இல்லை.

தமிழ் சினிமா இப்படி இருக்கிறதே என வருந்தகூடாது.பதிலுக்கு தமிழ் சமூகம் இப்படி இருக்கிறதே என வருந்த வேண்டும்.அல்லது பெண்களை அட்வைஸ் செய்து திருத்துவது நல்லதுதான் என நினைத்தால் மகிழவும் செய்யலாம்.

துண்டு போட்டு தெருவில் நடக்கும் தலித் தன் மேலான வன்முறையை தானே வரவழைத்துகொள்கிறான் என ஒரு காலத்தில் நம் சமூகம் நம்பியது.(இன்றும் சிலர்/பலர் நம்புகின்றனர்)..."உனக்கு எதுக்கு வம்பு..கைல செருப்பை எடுத்துகிட்டு நடக்காம அவனுக இருக்கற தெருவில கால்ல செருப்பை போட்டுட்டு நடந்தா அவனுக சும்மா விடுவானுங்களா?நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்..உன் இஷ்டத்துக்கு நடந்துக்கணும்னு நினைக்காம ஊர் வழக்கத்துக்கு மதிப்பு கொடு.." இப்படி அந்த காலத்தில் (இந்த காலத்திலும்) தலிதுகளுக்கு தரப்பட்ட ஆடை கட்டுபாட்டை பற்றிய அட்வைஸ்கள் அள்ளி வீசபட்டிருக்கும்.

மேலாடை போட்டால் ஆண்டைகளுக்கு ஏன் கோபம் வருகிறது?அது தலித்துகள் ஆண்டைகளின் மேலாதிக்கத்தை நிராகரிக்கிரார்கள் என்ற அச்சத்தில்.அந்த அச்சமே ஆண்டைகளை வன்முறைக்கு தூண்டுகிறது.பெண்களின் மேலான ஆடைகட்டுபாட்டுக்கும் அடிப்படை இதுவே.ஆடை கட்டுபாட்டை மீறும் பெண் ஆணாதிக்கத்தை அப்பட்டமாக அவமதிக்கிறாள்."நான் சுதந்திரமானவள், உனக்கு சமமானவள்" என தெருவிலிருக்கும் ஆண்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கிறாள்.ஆண்களால் அதை ஏற்கமுடிவதில்லை.உடனே போர் மூள்கிறது.கை வைக்க முடியாமல் சட்டம்/சூழல் தடுக்கும் பட்சத்தில் வார்த்தை வன்முறையால் ஆண்கள் தம் மனபுண்ணை ஆற்றிகொள்கின்றனர்..இன்று தெருக்களில் தலித்துகள் செருப்பு போட்டு நடக்கும்போது எதுவும் செய்ய இயலாமையில் ஆண்டைகள் வெறுப்புடன் எழுந்து கதவை சாத்திகொள்கின்றனரல்லவா?அதே உளவியல் தான் இங்கும்

நன்றி தமிழ் அமுதம்