தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

லலித் மோடி Vs சசி தரூர் இந்தியன் பொலிட்டிக்கல் லீக்!

இன்றைய ஐ.பி.எல். மேட்ச். மோதுகிறவர்கள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூரும், ஐ.பி.எல். கமிஷனர் லலித் மோடியும். அம்பயர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. தேர்டு அம்பயர் சோனியா. இதுதான் ஐ.பி.எல். மேட்சுகளிலேயே மிக ஹாட்டான மேட்ச்.

கிரிக்கெட்டில் பந்து எல்லை தாண்டினால் பாராட்டுவார்கள். ஆனால் ஐ.பி.எல். கமிஷனர் லலித் மோடி தங்களது அணி பற்றிய ரகசிய விவரங்களை ஒப்பந்தத்தின் எல்லை தாண்டி வெளியிட்டுவிட்டதாக கொதித்துப் போயிருக்கிறது கொச்சி அணி நிர்வாகம்.

கடந்த மார்ச் கடைசி வாரத்தில், ஐ.பி.எல்.போட்டிகளில் புனே, கொச்சி ஆகிய புதிய அணிகள் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதில் புனே அணியை ஆயிரத்து 702 கோடி ரூபாய் கொடுத்து சஹாரா அட்வென்ட்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியது.கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் ஆயிரத்து 533 கோடி ரூபாய்க்கு வாங்கியது. பத்து வருடங்களுக்கான இந்த ஒப்பந்தம் பற்றி ஐ.பி.எல் கமிஷனர் லலித் மோடி அறிவித்தார்.

தற்போது உள்ள எட்டு அணிகளை விற்றபோது கிடைத்த லாபத்தை விட பல மடங்கு லாபம் இந்த இரண்டு அணிகளை விற்றதன் மூலமே ஐ.பி.எல்.லுக்குக் கிடைத்தது. பணம் பெருகியதைப் போலவே சர்ச்சைகளும் கொச்சி அணியை மையமாக வைத்து ஐ.பி.எல்.லை. சுற்றி வளைத்திருக்கின்றன.

கொச்சி அணி ஐ.பி.எல்.லுக்குள் நுழைந்தபோதே ‘இந்த வியாபாரத்தின் பின்னால் கேரளாவைச் சேர்ந்த இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரான சசி தரூர் இருக்கிறார். அவர்தான் கொச்சி அணியை மறைமுகமாக வாங்கியிருக்கிறார்’ என தகவல்கள் வெளியாகின. ஆனால், அவற்றை அப்போது சசி தரூர் மறுத்தார்.

இந்த நிலையில்... சில நாட்கள் முன் லலித் மோடி தனது ‘ட்விட்டர்’ இணைய தளத்தில் எழுதிய கருத்துகள்தான் ஓய்ந்திருந்த சர்ச்சைத் தீயை மீண்டும் ஓங்கி எரிய வைத்திருக்கின்றன.

‘‘கொச்சி ரெண்டஸ்வஸ் அணியுடனான ஐ.பி.எல்.லின் ஒப்பந்தம் கையெழுத்தாகியபோது மத்திய அமைச்சர் ஒருவர் என்னிடம், ‘கொச்சி அணியை வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடவேண்டாம். அதிலும் குறிப்பாக சுனந்தா புஷ்கர் என்பவரும் பங்குதாரராக இருக்கிறார் என்ற தகவலை வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொண்டார். கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் வாங்குவதற்கும் அவர்தான் என்னிடம் பேசினார்.

கொச்சி அணியை வாங்கியிருக்கும் ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் கிஷன், சைலேந்தர் கெய்க்வாட், புஷ்பா கெய்க்வாட், சுனந்தா புஷ்கர், பூஜா குலாத்தி, ஜெயந்த கோதல்வார், விஷ்ணு பிரசாத், சந்தீப் அகர்வால் உள்ளிட்டோருக்கு இலவச பங்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கொச்சி அணியின் பங்குதாரர்கள் பற்றியும் அதிலும் குறிப்பாக சுனந்தா புஷ்கர் பற்றியும் எதுவும் சொல்லவேண்டாம் என்று என்னை அவர் ஏன் வற்புறுத்தினார் என எனக்கு புரியவில்லை’’ என்று ‘ட்விட்டரில்’ ட்விஸ்ட் வைத்திருக்கும் லலித் மோடி அந்த ‘அவர்’ யார் என்பதை குறிப்பிடவே இல்லை.

ஆனால் பங்குதாரர்களில் ஒருவராக சுனந்தா புஷ்கர் என்ற இளம்பெண்ணைக் குறிப்பிட்டிருக்கிறார் லலித் மோடி. அவரைத்தான் அமைச்சர் சசி தரூர் மூன்றாம் தாரமாக மணமுடிக்க இருப்பதாக செய்திகள் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன. எனவே சசி தரூரின் மனைவியாகப் போகிற சுனந்தா கொச்சி அணியில் பங்குதாரராக இருப்பதால், சசி தரூருக்கும் இந்த அணியில் தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஐ.பி.எல். சிக்ஸரைப் போல லலித் மோடி இப்படி ரகசியங்களை தூக்கி காட்டிவிட்டதை அடுத்து லலித் மோடி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் சசி தரூர். கொச்சியை வாங்கியிருக்கும் ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் லலித் மோடியின் மீது கோபத்தைக் காட்டியிருக்கிறது.

மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் சசிதரூர், ‘‘எனக்கு வசதி வாய்ப்புகள் எல்லாமே போதுமான அளவு உள்ளது. கொச்சி அணியை ஏலம் எடுத்தவர்களை எனக்குத் தெரியும். கெய்க்வாட் சகோதரர்களைக் கூட சந்தித்திருக்கிறேன். சுனந்தாவையும் எனக்கு நன்றாக தெரியும். கேரள அணி என்பதால் என் வாழ்த்தையும் ஊக்கத்தையும் அவர்களுக்கு தெரிவித்தேன். மற்றபடி எந்த வியாபார பரிவர்த்தனைகளிலும் எனது தலையீடு இருந்ததில்லை...’’ எனக் கூறியிருக்கிறார்.

லலித் மோடி மீது புகார் தெரிவித்து இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியிருக்கும் ரெண்டஸ்வஸ் நிறுவனம், ‘‘ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறைகளை மீறி லலித் மோடி தனது ‘ட்விட்டரில்’ சில விவரங்களை எல்லை தாண்டி வெளியிட்டிருக்கிறார். இது நம்பிக்கையான வர்த்தகத்துக்கு அழகில்லை. கொச்சி அணியின் பங்குதாரர்களின் பெயர்களை வெளியிட்டிருக்கும் லலித் மோடி இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும், ஐ.பி.எல்.லின் இப்போதைய மற்ற அணிகளின் பங்குதாரர்கள் பற்றிய விபரத்தையும் வெளியிடவேண்டும்’’ என கேட்டிருக்கிறது.

இதற்கிடையில் இந்த விவகாரம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் அம்பயரிங்குக்கு போனது. பேசிப் பார்த்த கிருஷ்ணா தனது இணை அமைச்சரான சசி தரூரின் பிரச்னையை தீர்க்க முடியாததால் தேர்டு அம்பயராக சோனியாவிடம் இந்த விவகாரத்தை கொண்டு சென்றார். இந்திய கிரிக்கெட் கவுன்சில் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவோடு சோனியாவை அவரது வீட்டில் சந்தித்து இதுபற்றி பேசியிருக்கிறார் கிருஷ்ணா. இதையடுத்து பத்து தினங்களுக்குள் இதுபற்றி கூட்டம் நடத்தி விவாதித்து பிரச்னையைத் தீர்க்க முடிவு செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.

ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய சசி தரூர் கொச்சி அணியின் மறைமுக பங்கு என்ற குற்றச்சாட்டோடு காஷ்மீர் பெண்ணான சுனந்தா புஷ்கரை மூன்றாவதாக திருமணம் செய்யப் போகிறார் என்பதும் சர்ச்சையாகி இருக்கிறது. ஒரு கட்டத்தைத் தாண்டி பிரச்னை தீவிரமடைந்திருப்பதால் இதைக் கையிலெடுத்திருக்கும் பி.ஜே.பி, ‘‘சசி தரூர் தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி ஐ.பி.எல். வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார். எனவே பிரதமர் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்’’ என கோரியிருக்கிறது.

‘‘எத்தனை விக்கெட்டுகள் வீழ்ந்தன என்று
டி.வி.யின் உள்ளே பார்க்காதே!

வெளியே பார்,

ஒவ்வொரு டி.வி.யின் முன்பும்

குறைந்த பட்சம்

ஐந்தாறு விக்கெட்டுகளாவது

வீழ்ந்து கிடக்கின்றன’’

என்றொரு கவிதை உண்டு.

சரிதான். அவர்கள் ஐ.பி.எல்.லைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கோடிகளில் புரண்டுகொண்டிருக்க, பல வேலைகளை விட்டு விட்டு மேட்ச் பார்த்து தற்கொலை வரை செல்லும் பாமர விக்கெட்டுகளே... இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!