தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

" கட்டாயக் கல்வித் திட்டம் " பதுங்குகிறது தமிழக அரசு - போகிறபோக்கில்...

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்வி என்பது பணம் கொழிக்கும் வர்த்தகம் என்ற அதீத நம்பிக்கையுடன் அரசியல் தலைவர்கள் பினாமி பெயர்களில் கல்வி நிலையங்களைத் திறந்து வருகின்றனர்.அங்கு பணமே முன்னுக்கு நிறுத்தப் படுகிறது.கல்வித்தரம் பின்னுக்குத் தள்ளபடுகிறது. ஆரம்பக் கல்வியைப் பொறுத்தவரை இங்கு தனியார் பள்ளிகளின் கொடிதான் பட்டொளி வீசிப் பறக்கிறது.எல்.கே.ஜி , யூ.கே.ஜி போன்ற மழலையர் கல்விக்கான விண்ணப்பங்களைப் பெறப் பெற்றோர் நள்ளிரவில் வரிசையில் காத்திருப்பது சாதாரண விஷயம் என்றாகிவிட்டது.

கல்விக்கு என்று மத்திய மாநில வரவு செலவு திட்ட அறிக்கையில் கணிசமான கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. அவை செலவு செய்யபட்டதாக கணக்கும் காட்டபடுகிறது , ஆனால் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் சொல்லி கொள்கிறாற்போல இல்லை. இதற்கு அரசாங்கத்தை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. கல்விக்காகப் போடப்படும் திட்டத்தைச் செயல்படுத்தும் கல்வித்துறை அதிகாரிகளும் தரம் குறைந்த கல்விக்குக் காரணம்.


அரசு ஊழியர்களுக்கு எல்லா சலுகைகளும் , சம்பளமும் என்று எந்தக் குறைவுமில்லாமல் வழங்கபட்டாலும் மாணவர்களின் கல்வித்தரம் என்பது கேள்விக்குறிதான்.


மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் ஆரம்பக் கல்வி. ஆனால் அந்த ஆரம்பக் கல்வியும் சரிவர வழங்கப் படுவதில்லை ஆசிரியர்கள் பள்ளிக்களுக்குச் சரியாக வருவதில்லை. வந்தாலும் பாடம் சொல்லி தருவது இல்லை என்பதே அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்துத் தனியார் பள்ளிகளை பொது மக்கள் நாடக் காரணம். இதில் உண்மையில்லை என்று யாரும் மறுக்க மாட்டார்கள்.


சலுகை கேட்டுப் போராடும் ஆசிரியர் சங்கங்கள் மாணவர்களின் கல்விக்கு நாங்கள் உத்தரவாதம் என்று ஒருபோதும் சொன்னது இல்லை. பெரும்பான்மையான கிராமங்களில் பள்ளிக்கட்டடங்கள் இல்லை. மரத்தடியில் வகுப்புகளை நடத்தும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. கவனிப்பாரில்லாமல் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது கல்வி.


ஏப்ரல் முதல் தேதி அன்று - அதாவது முட்டாள்கள் தினத்தில் - ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதையொட்டி பிரதமர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் யோசிக்க வேண்டிய பல விஷயங்கள் இருந்தன.


அனைவருக்கும் கல்வி என்ற இந்த முயற்சியில் மாநிலங்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.


பாலினம் சமூக வேறுபாடு இன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த அரசு உறுதி பூண்டு இருக்கிறது. இச் சட்டத்தை நிறைவேற்ற - செயல்படுத்த நிதி குறைபாடுகள் தடையாக இல்லாமல் இருக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்று உத்திரவாதம் அளித்தார் பிரதமர்.


நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் பேரரசின் பேரவையில் இந்திய மக்களுக்கு கல்வி உரிமை அளிக்க வேண்டும் என்று கோபால கிருஷ்ண கோகலே பேசினார். அதன் பின் தொன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு கல்வியை அடிப்படை உரிமையாக்கி அரசியல் சட்டம் திருத்தபட்டது .அதாவது இந்திய சுதந்திரம் அடைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு. அதற்கும் பத்து ஆண்டுகளுக்கு பிறகே அதைச் செயல்படுத்த அரசு முன் வந்துள்ளது . கல்விக்கு அரசு தரும் முக்கியத்துவம் இது.


திட்டத்திற்கு இருபத்தி ஐந்தாயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.


ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது இருபத்திரண்டு கோடி. , இதில் தொண்ணூத்தி இரண்டு லட்சம் பேர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் அல்லது பள்ளி படிப்பு வாசனையே இல்லாதவர்கள். இந்திய மக்கள் தொகையில் இது மிகக் குறைந்த சதவிகிதமே.


நூறு சதவிகித கல்வியறிவு பெற்றவர்களாக எல்லா குழந்தைகளையும் பள்ளிக்கு வர செய்வது சாத்தியமான விஷயமேதான்.


கட்டாய நன்கொடை , நுழைவுத் தேர்வு போன்று கல்வி கற்கத் தடையாக இருக்கும் எல்லா விஷயங்களும் இந்தச் சட்டத்தின்

மூலம் தடை செய்யபட்டுள்ளன.

இந்த சட்டம் மூலம் இலவசக் கட்டாயக் கல்வி வழங்கும் நூற்றி முப்பத்தி ஆறாவது நாடு (136) இந்தியா என்று யுனஸ்கோ பட்டியலிட்டுள்ளது.


மற்ற நாடுகளில் பெயரளவில் தான் இலவசக் கல்வி என்றும் , மறைமுகக் கட்டண வசூல் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் யுனஸ்கோ அமைப்பு தனது குறிப்பில் சுட்டி காட்டி இருக்கிறது.


இந்தியாவின் ஜனத்தொகை மற்ற நாடுகளை விடப் பன்மடங்கு அதிகம். இங்கு இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் கல்வித்துறை பாராட்டுக்குரியதுதான்.


ராஜஸ்தான் மாநிலக் கல்வி அமைச்சர் இந்த சட்டத்தின் பலனை முழுமையாக மாநில மக்கள் பயன் பெறும் வகையில் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் இடங்களை விரைவில் நிரப்புவோம் என்று சொல்லி இருக்கிறார்.


இதே போல் பீகார் , ஹரியான, ஒரிஸ்ஸா, குஜராத் போன்ற பல மாநில அமைச்சர்கள் இந்த சட்டத்தை நிச்சயம் நடைமுறை படுத்துவோம் என்று சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் தமிழக அரசு மட்டும் இந்தச் சட்டம் பற்றி எதுவும் வாய்திறக்கவில்லை,திராவிட கட்சி தலைவர்கள் முதலீடு எல்லாம் கல்வி நிலையங்களில் தான் கொட்டப்பட்டு வருகின்றன , கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி, கட்டணம் இல்லை, நன்கொடை இல்லையென்றால் அவர்கள் எப்படித்தான் பிழைப்பது?


எல்லாவற்றிற்கும் சாதனைப் பட்டியல் அறிக்கை விடும் முதல்வர் இந்த விஷயத்தில் அமைதி காத்து வருகிறார்,இந்தச் சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது முதல்வரின் அமைதி.


ஏற்கனவே தனியார் பள்ளிக் கட்டணம் நிர்ணயம் செய்ய நியமிக்கப் பட்ட குழு இது வரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.


இது பற்றியும் தமிழக அரசு கவலைபட்டதாக தெரியவில்லை.தமிழக அரசு கல்வியை இன்னும் கடைச் சரக்காகவே வைக்க விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது..


தமிழக அரசியல்வாதிகளின் முக்கியத் தொழில் கல்வி நிறுவனங்கள் நடத்துவது. எனவே கல்வி தொடர்பான எந்த நல்ல திட்டங்களையும் தமிழக அரசு நிறைவேற்றுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசுதான் இதற்கு விடை சொல்லவேண்டும்.