தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

‘‘தமிழன் என்று பதிவு செய்!’’

மக்கள் தொகை கணக்கெடுப்பில் திடீர் கோஷம்





இந்தியம் நம்மைக் கொல்ல ராணுவத்தைக் கூட்டிக் கொடுத்தது... திராவிடம் நம்மைக் கொல்ல நாடகம் ஆடிக் காட்டிக்கொடுத்தது... எனவே, இனச் சொந்தங்களே... மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மறந்தும் இந்தியன் என்றோ, திராவிடன் என்றோ பதிவு செய்யாதீர்கள். தமிழன் என்றே பதிவு செய்யுங்கள்’’

-இப்படியொரு சுவரொட்டியை தமிழகமெங்கும் ஒட்டி சலசலப்பை கிளப்பியிருக்கிறார்கள் தமிழ் சமூகங்களின் கூட்டமைப்பினர்.

இது தொடர்பாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் மள்ளரிடம் பேசினோம். ‘‘ஆரம்பத்தில் இருந்தே இந்திய அரசாங்கம் தமிழர்களை புறக்கணித்து வருகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் பயன்பாட்டு வார்த்தையாக வந்த ‘இந்தியா’ என்ற பெயர் பின்னர் அப்படியே நிலைபெற்றது.

மொழி அடிப்படையில்தான் இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் பொதுவாக எந்த மொழியையும் கணக்கெடுப்பில் பின்பற்றுவதில்லை. நமது இனத்தை அழிக்க நம் நாடே ராணுவத்தை அனுப்பியதை மறக்க முடியுமா? அப்படியிருக்க நாம் ஏன் இந்தியன் என்று குறிப்பிட வேண்டும்? திராவிட கட்சிகள் என கூறுபவர்கள் இது வரை தமிழர்களுக்காக என்ன செய்துள்ளனர்? இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட கட்சிகளும் இன்னும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதனால்தான் மறந்தும் கூட கணக்கெடுப்பில் இந்தியன் என்றோ, திராவிடன் என்றோ குறிப்பிட வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்தநிலை தொடராமல் தடுப்பதற்காகவும் அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியாகவே தமிழகம் முழுவதும் எங்கள் அமைப்பினர் இந்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இந்த அமைப்பில் மள்ளர் மீட்பு களம், பறையர் பேரவை, தமிழ்நாடு நாடார் மக்கள் இயக்கம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மறத் தமிழர் சேனை, அகமுடையர் அரண் என 10 அமைப்புகள் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றன’’ என்றார்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளர் உ.தனியரசு இதுபற்றி நம்மிடம்,

‘‘தமிழர்களை இந்தியர்களாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் தற்போதைய எதிர்ப்புக்குக் காரணம்.

நாங்கள் இந்தியாவை எதிர்க்கிறோம் என்ற எண்ணத்துடன் இதைப் பார்க்க கூடாது. தமிழர்களின் எண்ணிக்கையை வெளி உலகிற்கு அதிகரித்து காட்டும் முயற்சிதான் இது. திராவிடன் என்ற வழக்கம் நடைமுறையில் இல்லை. மரபு மொழியாக கருதப்படவில்லை. பொதுவாக ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் தொகையில் தமிழர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்டினால் மட்டுமே தமிழகத்திற்கும் தமிழுக்கும் சலுகைகளை பெற முடியும். அதனால் தான் இந்த விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தமிழ் ஆர்வம் கொண்ட எந்த அமைப்பினர் வேண்டுமானாலும் எங்களோடு கை கோத்து செயல்படலாம். அப்போது தான் தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும்’’ என்றார்.