தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மக்களை துன்புறுத்தாதீர்கள் - ராஜபக்சேவுக்கு புத்த பிக்குகள் எச்சரிக்கை

பதவிக்காக மக்களை துன்புறுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது என்ற புத்த மடாதிபதிகள் மொத்தமாக ராஜபக்சேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபக்சே சர்வாதிகாரத்தின் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார். உலகில் இதற்கு முன்பு இருந்த சர்வாதிகாரிகளை முந்தும் எண்ணத்தில் அவர் போய்க் கொண்டிருப்பது போலத் தெரிகிறது.

ஈழப் போரின் நாயகன் என்று சிங்கள மக்களால் வர்ணிக்கப்பட்ட பொன்சேகாவை பிடரியில் அடித்து உதைத்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த செயலால் சிங்களர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழர்களுக்கு எதிராக வெறித்தனமாக போர் நடத்திய இருவரான ராஜபக்சேவும், பொன்சேகாவும் இப்படி அடித்து நாறிக் கொண்டிருப்பதை உலக நாடுகள் மெளனமாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ராஜபக்சேவின் செயல்களுக்கு அந்த நாட்டு புத்த மடாதிபதிகளும் கண்டனம் [^] தெரிவித்துள்ளனர்.

மகாநாயகர் என்று அழைக்கப்படும் புத்த துறவி சித்தார்த்த சுமங்கல தேரா இதுபற்றி கூறுகையில்,

முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டுக்கு சேவை செய்த ராணுவ அதிகாரியை கைது செய்த விதம் மிகவும் மோசமானது.

தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களை பிரச்சினைக்கு உட்படுத்தி வருகிறது இந்த அரசு.

ராஜபக்சே அரசு நாட்டுக்கு நல்லதை செய்யும் என்று எதிர்பார்த்து தான் நாங்கள் அவருக்கு வாக்குகளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அரசு அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

மக்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிராக சாத்வீக முறையில் தங்கள் எதிர்ப்பை வெளியிட வேண்டும். அதிபர் தேர்தலில் அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலர் வீடுகளில் இருந்து வெளியேறி காடுகளில் வசிப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இது கவலை தருகிறது என்று கூறியுள்ளார்.

உருகம புத்தரகித்த தேரா எனும் இன்னொரு புத்த துறவியும் சரத் பொன்சேகா கைதை கண்டித்து உள்ளார். அவர் அரசு தங்கள் எதிர்ப்பாளர்களை விரோதிகளாக நடத்துவதாக கூறியுள்ளார்.

பொன்சேகாவுடன் மனைவி சந்திப்பு


இந்த நிலையில் ராணுவத்தினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட பொன்சேகாவை அவரது மனைவி அனோமா சந்தித்துப் பேசியுள்ளார். அவருடன் பொன்சேகாவின் வக்கீலும் உடன் சென்றாராம்.

பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படை தலைமையத்திற்கு சென்று அனோமா சந்தித்துள்ளதாகவும், இந்த சந்திப்பு நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பொன்சேகாவை சந்திக்க அனோமா நேற்று முழுவதும் செய்தியாளர்கள் மூலம் கெஞ்சினார். கண்ணீர் விட்டுக் கதறினார். உலக சமுதாயம் உதவ வேண்டும் என்று வேண்டினார்.

இதையடுத்து பாதுகாப்பு அமைச்சகம் பொன்சேகா மனைவியும், அவரது வழக்கறிஞரும் பொன்சேகாவை சந்திக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து நேற்று மாலை இலங்கை கடற்படை தலைமையகத்துக்கு ஒரு வாகனத்தில் அனோமாவும், வழக்கறிஞரும் சென்றனர். உள்ளே அழைத்து செல்லப்பட்ட இருவரில், பொன்சேகா மனைவி முதலில் அவரது கணவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது வழக்கறிஞர் சென்று பொன்சேகாவை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

இருவரும் தனித்தனியாக சந்தித்ததால் இரவு 9.30 மணி ஆகியது என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

கடற்படை தலைமையகத்தின் ஒரு கட்டடத்தில் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ளர் என்றும், அவர் சிறையில் அடைத்து வைக்கப்படவில்லை என்றும் பொன்சேகாவுக்கு அங்கு கடற்படையினர் மற்றும் ராணுவத்தினர் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர் அவசர உதவிகளை வழங்கி வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.