தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது ? - எஸ்.எம். கிருஷ்ணா உடனடியாக பதவி விலகவேண்டும் -நெடுமாறன்



இது குறித்து நெடுமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கையின் விவரங்கள் வருமாறு :

இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

உலகெங்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் அவர்களை அறியாமல் எல்லைத் தாண்டிச் செல்வதுண்டு. ஆனால் அவர்களையெல்லாம் யாரும் சுட்டுக்கொல்வதில்லை. குஜராத் மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடலில் நுழைந்து விட்டால் அவர்கள் சுடப்படுவதில்லை. மாறாக பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து சிறையில் வைக்கிறது. மேற்கு வங்க மீனவர்கள் வங்க எல்லைக்குள் புகுந்துவிட்டால் அவர்களை வங்க தேச கடற்படை கைது செய்கிறதே தவிர சுடுவதில்லை. ஏன் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை இதுவரை சுட்டதில்லை.

1983-லிருந்து இதுவரை 27 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். பல நூறு கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகளும் வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நமது கடல் எல்லைக்குள்ளாகவே இவ்வளவும் நடைபெறுகிறது. ராமேசுவரத்திற்கு அருகேயுள்ள வாழைக்குடா என்ற தமிழகச் சிற்றூரில் சிங்களக் கடற்படை வந்திறங்கி அங்குள்ள மீனவர்களை சுட்டும் அவர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் அட்டூழியம் செய்துவிட்டுத் திரும்பியுள்ளது.


இந்தியக் கடற்படை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.÷இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நமது மீனவர்களுக்குச் சர்வதேச சட்டங்களின்படி இழப்பீடு பெற்றுத்தர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.எஸ்.எம். கிருஷ்ணா ராஜபட்சவின் குரலில் பேசுகிறார். இவரைப் போன்றவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும்வரை தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய குடிமக்களுக்கே எத்தகையப் பாதுகாப்பும் ஒருபோதும் இருக்காது.

சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் விலக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.