தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஊழலில் ஊறி திளைக்கும் இந்தியா - இதுதான் இந்தியாவின் வளர்ச்சி.

பிரதமரும் , நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அடிக்கடு பயன்படுத்தும் வார்த்தைகள் இந்தியா முன்னேறுகிறது , இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு எட்டு சதவீத வளர்ச்சி அடைகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது ஒன்பது அல்லது பத்து சதவீத வளர்ச்சியாக இருக்கும் .


அந்த பொருளாதார வளர்ச்சி யாருக்கு பயன்பட்டது என்பதை இங்கே அமெரிக்காவின் நிதித்துறை ஆய்வு நிறுவனமான புகழ் பெற்ற " Financial integrity and Economic  Development"  எனும் நிறுவனம் அளித்துள்ள செய்தியை பார்த்தால் நன்றாக தெரிகிறது.


கீழே உள்ள செய்தியே போதும் என்பதனால் தலையங்கத்தினை  இத்தோடு சுருக்கி கொள்கிறேன்.




இன்றைய தலையங்கதிர்க்கான செய்தி  இங்கே :


இந்திய ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளால் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 6.5 லட்சம் கோடி சுரண்டப்பட்டு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.





வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொருளாதார ஆய்வு நிறுவனமான "குளோபல் பைனான்சியல் இன்டகரிட்டி' அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.  இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 8 சதவிகிதம் என்ற அடிப்படையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த செழுமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளனர்.





குறிப்பாக, 2000-2008 வரையிலான காலத்தில் ரூ.6.5 லட்சம் கோடி கறுப்புப் பணம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் இந்திய மக்கள் அனைவரின் வாழ்க்கைத்தரமும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊழல் விவகாரங்களால் அந் நாட்டில் ஏழைகள், பரம ஏழையாகி கொண்டிருக்கின்றனர். ஊழல்வாதிகள் செழித்து வளர்ந்து வருகின்றனர். ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயான சமுதாய ஏற்றத் தாழ்வு அதிகரித்து வருகிறது.




இந்தியாவில் ஊழலுக்கு எதிராக செயல்படுபவர்கள் படுகொலை செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.


சுரங்கத் தொழில், மின் வாரியம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த 11 பேர் இந்த ஆண்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.




2009-ல் வெளியிடப்பட்ட ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 84-வது இடத்தில் உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் இந்தியாவில் ஏழைகளுக்கு எதுவுமே கிடைக்காத நிலை உருவாகி விடும்.


ஊழலுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். லஞ்ச முறைகேடுகளுக்கு எதிராக செயல்படுபவர்களின் நலனைப் பாதுகாக்க "விசில் புளோவர்ஸ்' மசோதாவை நிறைவேற்ற அந் நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.




நிதி நடவடிக்கைகளில் வெளிப்படையானத் தன்மையை கடைப்பிடிப்பது உள்ளிட்ட சீர்திருத்த முயற்சிகளால் ஊழலைக் கட்டுப்படுத்தலாம் என்று அந்த அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.