தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்க வைகோ வின் வாதம் - பதில் அளிக்க முடியாமல் மத்திய அரசின் உள்துறை செயலர் திணறல் .

விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்க வைகோ வின் வாதம் - பதில் அளிக்க முடியாமல் மத்திய அரசின் உள்துறை செயலர் திணறல் .

இது தொடர்பாக வந்துள்ள செய்தியின் விவரங்கள் வருமாறு :

 

ன்று, (20.10.2010) புதன்கிழமை அன்று, உதகமண்டலத்தில், தமிழகம் மாளிகையில், விடுதலைப்புலிகள் மீதான தீர்ப்பு ஆயத்தின் விசாரணை நடைபெற்றது. தீர்ப்பு ஆயத்தின் தலைவரும், தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான, மாண்புமிகு விக்ரம்ஜித் சென், விசாரணையை சரியாக 10.30 மணிக்குத் தொடங்கினார். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, நீலகிரி மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், கழக வழக்கறிஞர்கள் குருநாதன், சூரி நந்தகோபால், பிரியகுமார், ஆசைத்தம்பி மற்றும்பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

 

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், வழக்கறிஞர் சந்திரசேகர் அவர்களும், மற்றும் நுற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இந்த விசாரணை மன்றத்தில் கூடி இருந்தனர்.

 

அரசுத்தரப்பின் இரண்டாவது சாட்சியாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறைப் பிரிவு இயக்குநர் மிஸ்ரா, சாட்சியம் அளித்தார். அவர், சாட்சியத்தை முடித்தவுடன், மாண்புமிகு நீதிபதி வைகோ அவர்களிடம், 'நீங்கள் குறுக்கு விசாரணை செய்கிறீர்களா?' என்று கேட்டார். வைகோ அதனை ஏற்றுக் கொண்டார்.

 

இப்படிப்பட்ட தீர்ப்பு ஆயங்களின் விசாரணையில், நேரடியாக சாட்சிகளிடம் கேள்வி கேட்கின்ற முறை இல்லை. கேள்வியை, நீதிபதி மூலமாகத்தான் சாட்சியிடம் கேட்க வேண்டும். அப்படி, நீதிபதி மூலமாக வைகோ கேள்விகளைக் கேட்டார்.

 

'மாண்புமிகு நீதிபதி அவர்களே, அரசுத்தரப்பின் இரண்டாவது சாட்சி இங்கே கூறுகையில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, உலகத்தில் பல நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள், இந்த அமைப்பை உருவாக்குவதில் பங்கு ஏற்று, தேர்தல் எல்லாம் நடந்து உள்ளது. விடுதலைப்புலிகளில் தீவிரப் பிரிவினரும், மிதவாதப் பிரிவினரும் என இரண்டு பிரிவுகளாக உள்ளனர். அதில் மிதவாதப் பிரிவினர் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை ஆதரிக்கின்றனர். இவையெல்லாம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு மேலும் ஒரு காரணம் ஆகிறது என்று இங்கே குறிப்பிட்டாரே, அவர் குறிப்பிட்ட அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்க, ஏற்பாடு செய்தவர்கள் உள்ள நாடுகளில், விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அவர் அறிவாரா?

 

உடனே நீதிபதி, 'இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்குமாறு' சாட்சியிடம் கூறினார்.


அதற்கு, சற்று நேரம் திணறிய சாட்சி மிஸ்ரா, 'அமெரிக்காவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளதா? என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை' என்று கூறினார்.

 

அடுத்து வைகோ, 'புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ள அமெரிக்காவில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, பிலடெல்பியாவில் தொடக்க விழா நடத்துவதற்கு, அமெரிக்க அரசாங்கமோ, அமெரிக்கக் காவல்துறையோ, எந்த இடையூறும் செய்யவில்லை என்பது, சாட்சிக்குத் தெரியுமா?'

 

இதற்கும் பதில் அளிக்குமாறு சாட்சியிடம் நீதிபதி கேட்டார்.

 

சாட்சி, 'அதுபற்றித் தனக்குத் தெரியாது' என்றார்.

 

உடனே மத்திய அரசு வழக்கறிஞர் எழுந்து, 'இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?' என்று கேட்டார்.

 

உடனே வைகோ எழுந்து, 'உலகம் முழுவதிலும், தொலைக்காட்சிகளிலும், ஏடுகளிலும் இது வெளிவந்து உள்ளது? வேறு என்ன ஆதாரம் வேண்டும்?' என்றுகேட்டார்.

உடனே அரசு வழக்கறிஞர் அமர்ந்து விட்டார்.

 

அடுத்து வைகோ கேட்டது, 'நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஏற்படுத்த, அமைப்பினை உருவாக்கியவர்கள் வெளியிட்ட தமிழ் ஈழம் குறித்த வரைபடத்தில், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகள் மட்டும்தான் இடம் பெற்று இருக்கின்றன. கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் தீர்ப்பு ஆயத்தில், நான் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில், இணைப்புப் பகுதியாகச் சேர்த்து உள்ள புத்தகத்தில், 67 ஆம் பக்கத்தில் இந்த வரைபடத்தைக் காட்டி இருக்கிறேன். நீதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள பிரமாண வாக்குமூலத்தைத் தாங்கள் இப்போது பார்க்கலாம்' என்று கேட்டுக் கொண்டார்.

 

உடனே நீதிபதி, அந்த ஆவணத்தை வரவழைத்து, அதைச் சரிபார்த்து, அதை விசாரணைக் குறிப்பில் பதிவு செய்து கொண்டார்.

 

உடனே வைகோ, 'தமிழ் ஈழம் என்பது இந்தப் பகுதி மட்டும்தான். தமிழ்நாட்டைச் சேர்க்கவில்லை என்பது இதிலே நிரூபணம் ஆகிறது. இதுபற்றி, சாட்சிக்கு ஏதாவது தெரியுமா?' என்று கேட்டார்.

 

சாட்சி, 'தனக்குத்தெரியாது' என்றார்.

 

அதன்பின் வைகோ, '2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு, விடுதலைப்புலிகளை ஆதரித்ததாகப் போட்ட வழக்குகள், ஏதேனும் தண்டனையில் முடிந்து இருக்கிறதா? ஏதேனும் விடுதலையில் முடிந்து இருக்கிறதா? 2008 மே மாதத்துக்குப் பிறகு போடப்பட்ட வழக்குகள் ஏதேனும் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறதா?' என்று கேட்டார்.

 

சாட்சி, 'அதுபற்றிய விவரங்களை இப்போது அளிக்க முடியாது' என்றார்.

 

வழக்கின் அடுத்த விசாரணை, 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

 

இதுபற்றி, செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், 'இந்தத் தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி, விசாரணயை மிக நேர்மையாக நடத்துகிறார். இன்று அரசாங்க சாட்சி, வகையாக மாட்டிக் கொண்டார். என் குறுக்கு விசாரணைக்குப் பதில் சொல்ல முடியவில்லை. தடையை நீடிக்கக்கூடாது என்ற என்னுடைய வாதத்துக்கு வலுச் சேர்ப்பதாக இன்றைய எனது குறுக்கு விசாரணை அமைந்து இருக்கிறது. தொடர்ந்து நீதிக்காகப் போராடுவோம்' என்று கூறினார்.