தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழர்கள் வாழ்ந்த பூமி இன்று சிங்களவனின் கையில் - தமிழர்களுக்கு அங்கு இடம் இல்லை.

வடக்கு இலங்கையில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் இன்றைய உண்மையான நிலவரம் என்ன?

பல்லாயிரம் தமிழர்கள் பதில் அறியத் துடிக்கும் கேள்வி இது. இதற்கான
பதிலைத் தருகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பியான சுரேஷ்
பிரேமச்சந்திரன்.

ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள அவரது பேட்டி:

புலிப் போராளிகளின் படைத்தளமாக இருந்த முல்லைத் தீவுக் கடல்தளம், இன்று
புதிர்கள் மண்டிக்கிடக்கும் பூகம்பப் பிரதேசம். வெளி உலகுக்கு அதன்
'ரகசியங்கள்' தெரிந்துவிடக் கூடாது என்பதில் மூர்க்கமாக இருக்கும் இலங்கை
அரசு, தமிழ் எம்.பிக்களைக்கூட அங்கு போகவிடாமல் தடுத்து வருகிறது.

கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவிலும், கடந்த வாரம் கிளிநொச்சி, முல்லைத்
தீவு மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன். சென்னை வந்துள்ள அவரைச் சந்தித்து,
சில கேள்விகளை முன் வைத்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 13 எம்.பி-க்கள் இருக்கும்போது, நீங்கள்
ஒருவர் மட்டும் முல்லைத் தீவுக்குச் சென்று வந்தது எப்படி?

புதிய எம்.பி-க்கள் அனைவரும்தான் கிளிநொச்சி, முல்லைத் தீவு
மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி கேட்டோம். ஆனால், இழுத்தடித்தனர்.
'பூடானில் சார்க் மாநாடு முடிந்த பிறகு போக லாம்' என்றது இலங்கை அரசு.
அது முடிந்த பிறகும் அனுமதி வரவில்லை. இப்படி, கூட்டமைப்பு எம்.பி-க்கள்
சேர்ந்து செல்வது தள்ளிக்கொண்டே போக... நான் எங்கள் கட்சியினருடன்
சேர்ந்து கிளிநொச்சி ஊடாக முல்லைத் தீவுக்குச் சென்று வந்தேன்.

எந்த வழியாகச் சென்றீர்கள்? வழியில் ராணுவத் தடைகள் இருந்தனவா?

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆனையிறவு, கிளிநொச்சி, மாங் குளம் ஊடாக முல்லைத்
தீவு சென்றோம். வழியெங்கும் பல இடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். படை
முகாம்களும், சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன. மாங்குளத்தில் இருந்து
முல்லைத் தீவுக்குச் செல்லும் சாலையில், நான்காவது கிலோ மீட்டரில் ஒரு
பெரிய சோதனைச் சாவடி. அங்கே வாகன இலக்கத்தைப் பதிவுசெய்துகொண்டு,
பயணத்தைப்பற்றிக் கேட்டார்கள். முல்லைத் தீவு மாவட்ட அரசு அதிபரைச்
சந்திக்கச் செல்வதாகக் கூறியதும் விட்டுவிட்டார்கள்.

எங்கெங்கே சென்றீர்கள்? இப்போது, அந்த இடங்கள் எப்படி உள்ளன?

கிளிநொச்சி, முல்லைத் தீவு நகரம், தண்ணீரூற்று, முள்ளிய வளை,
ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு ஆகிய இடங்களைப் பார்த்தோம். சுமார் மூன்று
லட்சம் வீடுகள் இருந்த இரண்டு மாவட்டங்களில், பெரும்பாலான கட்டடங்கள்
முற்றிலுமாகச் சேதம் அடைந்துள்ளன. மாவட்ட அரசு அதிபர் கட்டடம்போன்ற சில
இடங்களில்தான் பாதிப்பு இல்லை!

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமை என்ன?

மீள்குடியேற்றப்பட்ட என்று சொல்வதைவிட, 'முகாமில் இருந்து வெளியே
அனுப்பப்பட்ட' என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். சொந்த ஊருக்குத்
திரும்பினார்களே தவிர, அங்கே சொந்த வீடுகளே இல்லை. 99 சதவிகிதம் பேரின்
வீடுகள் முழுதுமோ, பயன்படுத்த முடியாத அளவுக்கோ ராணுவத் தாக்குதலால்
தகர்க்கப்பட்டுள்ளன. பெரிய பெரிய கல் வீடுகளில் வாழ்ந்தவர்களும் இப்போது
மரத்தடிகளில்தான் சுருண்டு கிடக்கிறார்கள். ஊர் திரும்புவோருக்கு ஐ.நா.
அகதிகள் ஆணையம் சார்பில், 5,000 ரூபாய் பணம் தருகின்றனர். வீடுகளைச்
செப்பனிட இந்தத் தொகை கொஞ்சமும் போதாது. அகதிகள் ஆணையம் வழங்கும் 10
தகரங்களையோ தார்ப்பாலினையோ வைத்து டென்ட் அடித்துக்கொண்டு, அதில்தான்
மக்கள் பசியில் கிடக்கின்றனர்!

மக்கள், வயிற்றுப் பசியாற என்ன செய்கிறார்கள்?

இரண்டு மாவட்டங்களிலும் விவசாயமும் மீன்பிடியும்தான் தொழில்கள். இங்குள்ள
75 சதவிகித மக்கள் உழைத்து வளமாக வாழ்ந்தவர்கள். இன்று அடிமட்டத்துக்கு
வந்துவிட்டார்கள். ஒட்டு சுட்டான், முத்தையன்கட்டு கிராமங்களில்
ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நெல் பயிரிடப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் 10
ஏக்கர், 20 ஏக்கர் என்று பயிர்செய்து வந்தனர். ஏராளமான காய்கறி களையும்
பயிரிட்டு வட மாகாணம் முழுவதும் தந்தவர்கள் அவர்கள். ஆனால், அவர்களால்
அங்கு இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. விதை நெல் கிடையாது, உரம்,
கிருமிநாசினிக்கு வழி இல்லை, உழைக்கக் கருவிகள் இல்லை. உணவுக்கும் வழி
இல்லை.

பல விவசாயிகளின் நிலங்களில் ராணுவம் முகாம்கள் அமைத்துவிட்டது. பல
இடங்களில் ராணுவ நிரந்தர முகாம்களுக்காக, பெரும் அளவில் நிலம்
கையகப்படுத்தப்பட்டுள்ளதில், விவசாய நிலங்களும் அடக்கம். மேலும்,
மாடுகளையும் அபகரித்துவிட்டார்கள். பல பகுதிகளுக்குச் செல்லவிடாமல்
மக்களை ராணுவம் தடுப்பதால், காணாமல்போன மாடுகளைத் தேடவும் வாய்ப்பு
இல்லை. நீண்டகாலம் உரிமையாளரின் பராமரிப்பு இல்லாததால், அந்த மாடுகள்
கட்டாக்காலி மாடுகளாகத் திரிகின்றன. இவற்றில், கணிசமானவற்றை
ராணுவத்தினரின் பண்ணைகளில் பார்த்த தாகக் கூறிய மக்கள், அதைக் கேட்கும்
துணிவின்றி நிற்கிறார்கள்.

மீனவர்களின் நிலையும் படுமோசம். அவர்களுக்கு வலையோ, படகு இயந்திரமோ
எதையும் வழங்கவில்லை. மீன் பிடிக்க பல இடங்களில் அனுமதி அளித்ததாக அரசு
கூறுகிறது. ஆனால், வற்றாப்பளை என்ற மீனவக் கிராமத்தில் நந்திக்கடலை
ஒட்டி, குறிப்பிட்ட பகுதியில் (கடைசிக்கட்டப் போரில் மக்கள் அரசுப்
பகுதிக்கு நடந்து வந்த பகுதி இது) மட்டும்தான் மீன் பிடிக்க அனுமதி
அளிக்கப்படுகிறது. அதுவும் நடந்தே சென்று மீன் பிடிக்கக்கூடிய சிறிய
பகுதியில் மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளதால், அதிகம் பேர் குவிய...
குறைவான மீன்களே கிடைக்கின்றன. ஒரு நாளைக்கு இலங்கைப் பணத்தில் 100, 150
ரூபாய் வரை கிடைத்தாலே பெரிய விஷயம். (இந்திய மதிப்பில் 50 முதல் 75
ரூபாய் வரை) ஒரு சிறிய குடும்பத்துக்கே இந்தத் தொகை போதாது. குழந்தை உள்ள
குடும்பத்தினர், வாரம்தோறும் உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும்
அரிசி, பருப்பு, சீனியை விற்று, அதன் மூலம் குழந்தைகளுக்குப் பால் மாவு
வாங்கிக் கொடுக்கவேண்டிய நிலை!

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்... ஆனால், உரிய முறையில் மக்களை
மீள்குடியேற்றம் செய்வதாக அரசுத் தரப்பு கூறுகிறதே?

இதற்கு நான் ஓர் உதாரணத்தைச் சொல்ல முடியும். கிளிநொச்சி மாவட்டத்தில்
சாந்திபுரம் என்று ஒரு கிராமத்தில், 400 குடும்பங்கள் முன்பு இருந்தன.
இவர்கள் முகாம்களில் இருந்து வந்ததும், 100 குடும்பங்களுக்கு மட்டும்
கல்வீடுகள் கட்டித் தரப்பட்டன. ஆனால், அவர்களை அங்கே வசிக்கவிடாமல்
மீண்டும் முகாம்களுக்கே அனுப்பி விட்டனர்.

மேலும், முகாம்களில் இருந்து ஊருக்கு அனுப் பப்படும் ஒவ்வொரு
குடும்பத்துக்கும் 5,000 தரப் படுவது தவிர, 20 ஆயிரம் ரூபாய் வங்கியில்
போடப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்படி வங்கியில் பணம்
செலுத்தப்பட்டு, பாஸ் புத்தகம் எதுவும் யாருக்கும் இது வரை
வழங்கப்படவில்லை!

இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் ஆயிரக்கணக்கான வாகனங்களை
விட்டுச்சென்றார்களே... அவற்றின் கதி..?

எனக்குத் தெரிய கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் 35 ஆயிரம்
மோட்டார் சைக்கிள்கள், 10 ஆயிரம் டிராக்டர்கள் இருந்தன. அவற்றைக்
கேட்டபோது, புலிகள் அழித்துவிட்டதாக முதலில் ராணுவம் கூறியது. நாங்கள்
பலமுறை இதுகுறித்து முறையிட்ட பிறகு இப்போது, 100 மோட்டார் சைக்கிள்கள்
இருப்பதாகவும், பெற்றுக்கொள்ளலாம் என்றனர். ஆனால், மொத்த வாகனங்களையும்
ராணுவத்தினர் உதிரி பாகங்களாகப் பிரித்து விற்றுவிட்டதாகக்
கூறப்படுகிறது.

கடைசியாகப் போர் நடந்த கடலோரப் பகுதியில் என்ன பார்த்தீர்கள்?

ராணுவத் தாக்குதல் நடந்த முள்ளி வாய்க்கால், மாத்தளன் கடல்பகுதியை
ராணுவம் தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறது. மாங்குளத்தில் இருந்து
முல்லைத் தீவுக்கு என்னை அனுமதித்த படையினர், ஒட்டுசுட்டான் சந்தி என்ற
இடத்துக்கு மேல் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்
என்று நான் கூறியும், 'உங்களுக்கு மாவட்ட அரசு அதிபரைச் சந்திக்கத்தான்
அனுமதி உள்ளது' என்று தடுத்துவிட்டார்கள். அதற்கு, அங்கே கண்ணிவெடிகளை
அகற்றுவதாக அரசுத் தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது.

அங்கு கண்ணிவெடி அகற்றப்படுவது உண்மைதானா? இதுபற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

வற்றாப்பளை கிராமத்தில் மட்டும் 15 பேர்கொண்ட குழுவினர் கண்ணிவெடியை
அகற்றும் பணியில் ஈடுபட் டிருந்தனர். இதேபோல, எல்லாக் கிராமங்களிலும்
கண்ணிவெடி இருக்கவேண்டும் என்பதில்லை. அப்படிச் சொல்வது தவறு. ஓரிரு
இடங்களில் கண்ணிவெடிகளை புலிகளும் வைத்திருக்கலாம், ராணுவமும்
தற்காப்புக்காக வைத்திருக்கலாம்.

ஆனால், கடைசிக் கட்டத் தாக்குதல் நடத்தப்பட்ட மாத்தளன், முள்ளிவாய்க்கால்
கடலோரத்தில் நின்ற மக்கள், தங்கள் நகைகளையும் உடைமைகளையும் அங்கு பல
இடங்களில் புதைத்துவைத்துள்ளனர். அவற்றை ராணுவத்தினர்
எடுத்துக்கொள்ளக்கூடும் என்றும் தெரிவித்தார்கள். இலங்கை ராணுவத்தின்
மீது போர்க் குற்றச்சாட்டு வலுத்துவரும் நிலையில், அரசாங்கத்தின்
தடையானது சந்தேகங்களை வலுவாக்குகிறது...., என்று கவலை வார்த்தைகளில்
இறக்கிவைத்தார் சுரேஷ் பிரேமச் சந்திரன் எம்.பி!